சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விநியோகத் துறை, செய்தித்தாள் விநியோகிப்பாளர்களின் கடும் உழைப்பை அங்கீகரித்து அவர்களைப் பாராட்டும் விதமாக ஒரு சிறிய காணொளியை வெளியிட்டு இருக்கிறது.
அந்தக் காணொளியில் செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் ஐந்து பேர் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களில் திரு பக்கிரிசாமி சாமிதுரை, 47, ஒருவர்.
15 ஆண்டு காலமாக செய்தித்தாள் விநியோகித்து வரும் இவர், புக்கிட் பாத்தோக்கில் அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை அன்றாடம் கடுமையாகப் பணியாற்றுகிறார்.
அந்த வேலை நேரத்தை தான் விரும்புவதாகக் கூறும் திரு பக்கிரிசாமி, அதனால் தன் பிள்ளைகளுடன் செலவிட போதிய நேரம் கிடைப்பதாகக் கூறினார். பல பெற்றோர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை என்றார் அவர்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் கொவிட்-19 கடுமையாக தலைவிரித்தாடியது. அப்போது தன்னையும் அந்தக் கிருமி தொற்றிவிடும் என்று திரு பக்கிரிசாமி கவலை அடைந்தார் என்றாலும் சந்தாதாரர்களுக்குச் செய்திகள் கிடைப்பது மிக முக்கியம் என்பதால் தன் வேலையைத் தொடர்ந்ததாகத் தெரிவித்தார்.
“நகரமே தூங்கும் போது நான் வேலை பார்க்கிறேன். புத்தம்புது காற்றை அமைதியான வீதிகளை அனுபவிக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, செய்தித்தாள் விநியோகிக்கும் பலரையும் போலவே திரு சாதிக் பாட்சா, 51, என்பவரும் ஊடகத் தொழில்துறையின் உருமாற்றம் தன் பணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கிறார்.
அன்றாடம் அதிகாலை 2 மணிக்கு எழுந்து புக்கிட் பாஞ்சாங், தோ பாயோவில் இவர் செய்தித்தாள் விநியோகிக்கிறார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான திரு பாட்சா, கடந்த 30 ஆண்டு காலத்தில் செய்தித்தாள் விநியோகப் பணி உருமாறி வந்திருப்பதைத் தான் பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
“சிறுசிறு மாற்றங்கள் பல இடம்பெற்றாலும் எங்கள் வேலை தொடர்ந்து ஏற்புடைய ஒன்றாகவே இருந்து வரும். இளம் தலைமுறையினர் இணையத்தின் மூலம் செய்திகளைப் பெறுகிறார்கள். இருந்தாலும் முதிய சிங்கப்பூரர்கள் பலரும் அதிகாலையில் செய்தித்தாள் படிப்பதை இன்னமும் தாங்கள் விரும்பும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்,” என்று திரு பாட்சா கூறினார்.
காணொளியில் இடம்பெற்று உள்ள செய்தித்தாள் விநியோகிப்பாளர்களில் 43 ஆண்டுகளாக அந்தச் சேவையில் ஈடுபட்டு வரும் திரு டோனி சுவா, 66, மற்றொருவர். இந்த வேலையில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இவரிடம் இல்லை.
வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் செய்தித்தாள் விநியோகிக்கும் இவர், இந்த வேலை தனக்கு காலைநேர உடற்பயிற்சி என்கிறார்.