கொவிட்-19 தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சிங்கப்பூர் முடிவு எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அறிவியல், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
தாங்கள் உற்பத்தி செய்த கொவிட்-19 தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்கக் கூறி யாரும் சிங்கப்பூருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
“தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்கவோ அல்லது அதை நிராகரிக்கவோ சொல்லி யாரும் சிங்கப்பூரை அச்சுறுத்த முடியாது. சிங்கப்பூருக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஆனால் இதையும் நாம் முறையாகக் கையாள வேண்டும்,” என்றார் டாக்டர் விவியன்.
கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் விநியோகம் குறித்து பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விவியனின் கருத்து அமைந்தது.