நூறாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலக்கன் தேவாலயமும் அதனை ஒட்டிய பாலர் பள்ளிக் கட்டடமும் நீல் ரோட்டில் காவல்துறை வளாகத்துடன் இணைக்கப்பட உள்ளன. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஆர்டி திட்டம் ஒன்றுக்காக இவை கையகப்படுத்தப்பட்டன.
செயின்ட் மேத்யூ தேவாலயம் 1890களில் தோற்றுவிக்கப்பட்டது. அதனருகில் உள்ள மேத்யூ பாலர்பள்ளி 1950ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கேன்டன்மன்ட் காவல்துறை வளாகத்தின் விரிவாக்கத்துடன் இவை இணைக்கப்படும். விரிவாக்கப் பணிகளை 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. புதிதாக உருவாக்கப்படும் காவல்துறை வசிப்பிடங்களின் பகுதியாக இந்த இரு கட்டடங்களும் இடம்பெறும்.
இருந்தாலும் இவற்றின் வரலாற்று வடிவமும் மரபுடைமையும் தொடர்ந்து கட்டிக் காக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது. மேலும் இவற்றின் கட்டடக் கலை அம்சங்கள் மாற்றமின்றி தொடரும் என்றும் அது தெரிவித்து உள்ளது.
"கலை அம்சங்கள் பாதுகாக்கப்படும் இடங்களில் பொதுவாகவே பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாவல் பாடப் பயிற்சி, ஈடுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் இவ்விரண்டு கட்டடங்களிலும் அதே நடைமுறை தொடரும்.
"ஆயினும், பாதுகாக்கப்படும் கட்டடங்களின் வெளிப்புற கலை அம்சங்கள் வீதிகளில் இருந்தும் பக்கவாட்டுப் பாதைகளில் இருந்தும் பார்க்கும் அளவுக்கு இருக்கும்," என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேத்யூ தேவாலயத்தை பிரிட்டிஷ் கடலோடிகளும் ஊட்ரம் சிறைச்சாலையைச் சேர்ந்த காவலாளிகளும் 1890களில் வழிபாட்டுக்காகப் பயன்படுத்தி வந்தனர். பின்னர் 1920களில் சிங்கப்பூர் ஆங்கிலிக்கன் மறைமாவட்ட திருச்சபை அந்தக் கட்டடத்தை சொந்தமாக்கிக் கொண்டது. ஜப்பானிய படையெடுப்பு முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கட்டடம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதான கட்டடப் பகுதியின் அருகில் பாலர் பள்ளி ஒன்று உருவாக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் பிரதான தேவாலயக் கட்டடம் நவீன பாணியில் மாற்றி அமைத்துக் கட்டப்பட்டது.
"அருகருகே அமைந்துள்ள இரு கட்டடங்களும் வீதியிலிருந்து பார்ப்போரைக் கவர்கின்றன. அவற்றின் கட்டடக்கலை மிளிரும் வண்ணம் அமைந்திருக்கிறது," என்று நகர மறுசீரமைப்பு ஆணையப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தேவாலயமும் பாலர் பள்ளியும் 1998ஆம் ஆண்டு தங்களது செயல்பாடுகளை நிறுத்தின. ஈராண்டுகளுக்குப் பின்னர், வடக்கு-கிழக்கு எம்ஆர்டி பாதை அமைப்பதற்காக அவை கையகப்படுத்தப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும், ரயில் பாதை நீளும் பகுதியில் அவ்விரு கட்டடங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து 16 ஆண்டு காலமாக மரபுடைமை பாதுகாப்பில் அவை வைக்கப்பட்டு அரசிதழில் பதிவு செய்யப்பட்டன.