சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தபோது, நோய் தொற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் அதிகாரிகளுக்கு உதவ இணையச் செயலி ஒன்றை உருவாக்க சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை (என்யுஎஸ்) சேர்ந்த குழு ஒன்று மும்முரமாக செயல்பட்டது.
அத்தகைய பெரிய அளவிலான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அக்குழுவுக்கு அனுபவம் குறைவு என்றபோதிலும், சிங்கப்பூர் ஆயுதப்படையின் உதவியுடன் மூன்று வாரங்களுக்குள் அக்குழு அந்தச் செயலியை உருவாக்கியது. அந்தக் குழுவில் முன்னாள், இன்னாள் என்யுஎஸ் மாணவர்கள் அறுவர் இடம்பெற்றனர்.
கொவிட்-19 நோயாளிகளின் நடமாட்டத்தையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைத் தடமறியும் அதிகாரிகளிடம் வழங்க அச்செயலி உதவியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 'ஐடி லீடர்' விருது வழங்கும் நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டவர்களில் அந்த என்யுஎஸ் குழுவினரும் அடங்குவர். கொவிட்-19 நெருக்கடி சூழலின்போது தொழில்நுட்பத்தைக் கொண்டு சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு நன்றிகூறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களைப்போல கூடுதலான தொழில்நுட்ப நாயகர்களை சிங்கப்பூர் பேண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்த வகையில் சிங்கப்பூரர்களுக்கு மின்னிலக்கத் திறன்களை வளர்க்கவும் அவர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கவும் அரசாங்கம் பெரிதளவில் முதலீடு செய்து வருவதை அமைச்சர் ஈஸ்வரன் சுட்டினார்.
கடந்த ஆண்டு 'எஸ்ஜி யுனைடெட்' வேலை, திறன் திட்டங்கள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி தகவல் தொழில்நுட்ப வேலை, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளில் 12,400க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டதை அமைச்சர் சுட்டினார்.
தற்போது 18,700க்கும் அதிகமான வேலைகள், வேலைப் பயிற்சி வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.