மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்கு ஆதரவளிப்பது நோக்கம்
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இளையர்கள் அறுவர் சமூக வளம் ஒன்றை உருவாக்க கைகோத்துள்ளனர்.
பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் வேலை செய்யும் இளையர்கள் என பலதரப்பினரிடம் இருந்து கதைகளையும் கருத்துகளையும் சேகரிக்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் இந்தக் குழுவுக்கு மதியுரை வழங்கி வருகிறார்.
இளையர்கள் கூறும் கதைகள் ஒரு மின்நூலாக தொகுக்கப்படும். இது மற்ற இளையர்களுடன் பகிரப்படலாம்.
இளையர்களிடம் மனநலத்தை மேம்படுத்த விரும்பிய திருமதி சுன், இந்தத் திட்டத்திற்கான யோசனையை முன்வைத்திருந்தார். மனச்சோர்வால் பாதிக்கப்பட்டும் உதவி பெற முன்வராதோரைப் பற்றியே தாம் அதிகம் கவலைப்படுவதாக அவர் சொன்னார்.
'Project It'll Be Alright' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், இளையர்களிடையே மனநலத்தை மேம்படுத்த விரும்பும் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கிறது.
"ஒவ்வொருவரும் சவால்களை எதிர்நோக்குகின்றனர். இதில் நம்பிக்கையும் உள்ளது, ஏமாற்றமும் உள்ளது. சொற்களிலும் நூல்களிலும்தான் நான் ஆறுதலைத் தேடுகிறேன். இதுவே எனது தனி இயல்பு," என்று திருமதி சுன் விவரித்தார்.
"உள்ளூர் சூழலில் இளையர்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய கதைகள் ஏராளம் இருக்கும் என நம்புகிறேன். வேலை தேடுவது, உறவுமுறை, கல்வி உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பில் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்து கதைகளை நாம் பெற்றால் இத்தகைய விவகாரங்களைச் சந்திக்கும் இளையர்களுக்கு இந்தக் கதைகள் உதவியாக இருக்கும்," என்றார் திருமதி சுன்.
மனநலப் பிரச்சினையைச் சமாளிக்க உதவி பெற முன்வராதோருக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து இளையர்கள் பங்களிக்க முன்வருமாறு பிப்ரவரி 17ஆம் தேதி திருமதி சுன் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பலரும் தமக்கு மின்னஞ்சல் அனுப்பியதோடு இந்தத் திட்டத்தில் அங்கம் வகிக்க சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக திருமதி சுன் சொன்னார்.