ஆர்த்தி சிவராஜன்
தமிழ் மொழி விழாவின் முதல் தமிழ் போட்காஸ்ட் (podcast) நிகழ்ச்சியான 'தமிழ் அருவி'யில் கலந்துகொள்ள ரமேஷ்குமார் தன்வின் முதலில் தயங்கினார். தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவரான இவருக்கு இப்போட்டி யில் கலந்துகொள்ள ஊக்கம் அளித்தது அவரின் தமிழ் ஆசிரியர். தமிழ் மொழியைப் பேசுவதில் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் அவர்களின் மொழித் திறன்களை வளர்ப்பதற்கும் ஒரு தளத்தை உருவாக்குவதே தமிழ் அருவியின் நோக்கம் ஆகும்.
இந்நிகழ்ச்சியை நினெமர் கம்யுனிகேஷன்சின் (Ninemer Communications) துணை இயக்கு நரான 30 வயது திருமதி இலக்கியா செல்வராஜி தொகுத்து வழங்குகிறார். இப்போட்டியில் 30 உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் மற்றும் பலதுறைத் தொழில்கல்லூரிகளிலிருந்து ஏறத்தாழ 110 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். மாணவர்களுக்கு ஒரு தலைப்பு வழங்கப்படும். அத்
தலைப்பில் இரண்டு நிமிடங்களுக்கு அவர்கள் பேச வேண்டும். அவ்வாறு பேசுவதை அவர்கள் காணொளி மூலம் பதிவு செய்து போட்டி ஏற்பாட்டாளருக்கு அனுப்ப வேண்டும். அவற்றை 'தமிழ் அருவி 2021' என்னும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவவேற்றுவார் திருமதி இலக்கியா. போட்டியைச் சார்ந்த வெவ்வேறு குறிப்புகளும் அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டு வருகின்றன. 110 மாணவர்களில், 10 மாணவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுள் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
"இப்போட்டியின் மூலம் மாணவர்கள் இரண்டு சவால்களை மேற்கொள்வார்கள். முதல் சவால் பேச்சுத் தமிழில் பேசுவது. பேச்சுத் தமிழில் பேசுவது மிகவும் எளிதானது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கலாம். ஆனால் போட்டியாளர்கள் அனைவருக்கும் இது உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தது. இரண்டாவது சவால் கொடுக்கப்பட்ட தலைப்பு களைப் பற்றி இயல்பாக ஆராய்ச்சி மேற்கொள்வது. ஆழமான தலைப்புகளில் இரண்டு நிமிடங்களுக்குப் பேசுவது மிகவும் சிரமம். அவ்விரு நிமிடங்களுள் சொல்ல வரும் முக்கிய தகவல்களை உள்ளடக்க வேண்டும்" என்று கூறினார் திருமதி இலக்கியா.
இந்த போட்காஸ்ட் தொடரில் மற்றோர் அங்கமும் இருக்கிறது. இரண்டு நடுவர்களுடன் திருமதி இலக்கியா பேசும் போட்காஸ்ட்டும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழி சேவைகள் பிரிவின் மூத்த தலைவர் திரு அழகியபாண்டியன் முதல் தலைவராகச் செயல்படு கிறார். ஊடகத்துறை வல்லுநரான திருமதி காமாட்சி அபிமனன் இரண்டாவது நடுவராவார். மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இரு நடுவர்களும் பல
குறிப்புகள் தருகின்றனர்.
"பல ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழில் பேசுவதை ஊக்குவிப்பதற்குப் பேச்சும் எழுத்தும் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தலாம். தமிழ் மொழியில் சிறந்து விளங்குவதே அப்போட்டிகளின் நோக்கம். ஆனால் சிறப்பு என்ற அம்சத்திற்கு முன்பு, தமிழ்ப் பயன்பாடு என்ற அம்சம் ஒன்று இருக்கிறது. வழக்கு தமிழில் பேசுவதற்கான போட்டித் தளங்கள் அதிகம் இல்லை. பேச்சுத்தமிழில் பேசும் இயல்பை மாணவர்களிடையே தூண்ட வேண்டும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழ் அருவி போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவேன்" என்றார் திருமதி இலக்கியா.