அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்
சிங்கப்பூரில் நேற்று மதியம் வரை 40 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,006க்கு அதிகரித்துள்ளது.
அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டனர் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் 12 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பணிப்பெண்களும் அடங்குவர் என்று அமைச்சு குறிப்பிட்டது.
உள்ளூரில் யாரும் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களிலும் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகவில்லை.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறியது.
சனிக்கிழமை அன்று உள்ளூர் கிருமிப் பரவலில் பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் 45 வயது நிரந்தவாச உரிமை பெற்ற ஆடவர் ஆவார். அரசாங்க தனிமைப்படுத்தும் இடங்களில் தங்கியிருந்த தமது தாயாரை அவர் கவனித்து வந்தார்.
தடுப்பூசி போட்ட பிறகும் அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 26ஆம் தேதி அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மார்ச் 19ஆம் தேதி அவர் 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.
ஏப்ரல் 15ஆம் தேதி அவரது பெற்றோர் சிங்கப்பூர் வந்தனர். அப்போது அவரது தந்தைக்கு கிருமித் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது தாயார் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருந்ததால் ஏப்ரல் 16ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டார்.
இந்தியாவிலிருந்து வந்த அதே விமானத்தில்தான் தொற்று இருந்த சார்ந்து இருப்போர் அட்டை வைத்திருந்த இருவர் பயணம் செய்தனர்.
தனிமைப்படுத்தும் வசிப்பிடத்தில் தங்கியுள்ள தாயாரை கவனித்துக் கொள்ள விரானா ஷிப்பிங் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றும் நிரந்தரவாசியான அவரது மகனிடம் அமைச்சு கேட்டுக் கொண்டது.
அவரது தாயாருக்கு ஏப்ரல் 15, 17 தேதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது ெதரிய வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை அவருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மறுநாள் சனிக்கிழமை அன்று தேசிய தொற்றுநோய் நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு பெரும்பாலான சமயங்களில் கிருமித்தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என்ற அமைச்சு, தனிப்பட்ட சம்பவங்களில் மீண்டும் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளது என்றும் கூறியது.