இந்து இளங்கோவன்
சிறு வயதிலிருந்தே உயிரியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்ட விஷ்ணதுளசி மணிவண்ணன், 23, உயர்நிலைப்பள்ளி மாணவியாக இருந்தபோதே சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் படித்து பட்டம் பெற்று, எதிர்காலத்தில் உயிரியல் ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற
கனவுகளுடன் இருந்தார்.
ஜிசிஇ சாதாரணநிலை தேர்வுக்குப் பிறகு பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க தொடக்கக்கல்லூரியில் சேர்ந்து தனது கல்விப் பயணத்தை அவர் தொடர்ந்தார்.
தொடக்கல்லூரிக்குப் பிறகு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டப் படிப்பைத் தொடரலாம் என்று ஆவலுடன் காத்திருந்த விஷ்ணதுளசிக்கு ஏமாற்றத்தை தந்தது அவரது ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு முடிவுகள்.
இத்தகைய சூழ்நிலை ஏற்படும்போது பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்று கல்வியைத் தொடர்வர்.
ஆனால் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஷ்ணதுளசி தெமாசெக் பலதுறைத் தொழிற்
கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் படித்து பட்டயச் சான்றிதழ் பெற்றார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி முதல் ஆண்டில் பயின்றபோது விஷ்ணதுளசிக்கு 20 வயது. சக மாணவர்களைவிட அவருக்கு வயது அதிகம். இந்த வயது வித்தியாசம் ஆரம்பத்தில் தமது தோல்வியை அடிக்கடி நினைவுபடுத்தும் ஒன்றாக இருந்ததாக இவர் கூறுகிறார்.
தற்போது இவருக்கு 23 வயதாகிறது. உபகார சம்பளத்துடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மானுடவியல், அறிவியல் பள்ளியில் கல்வியைத் தொடங்க தயாராக இருக்கிறார்.
"வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பயணங்களை மேற்கொள்கின்றனர். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாலும்
பரவாயில்லை. உங்கள் பாதையை மற்றொரு நபரின் பாதையுடன் ஒப்பிட வேண்டாம் என்பதே நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம்," என்றார் விஷ்ணதுளசி.
"தொடக்கக் கல்லூரி சிலருக்கு பொருத்தமானதாக இருக்காது, அதேபோல் பலதுறைத் தொழிற்கல்லூரியும் சிலருக்கு பொருத்தமாக இருக்காது.
"பல்கலைக்கழகத்திற்குச் செல்ல விரும்பினால் தொடக்கக் கல்லூரி பாதையை எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள்.
"இது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், விருப்பமில்லாத காரியத்தில் இறங்கினால் அதற்கான முழு உழைப்பை தருவதற்கான முனைப்பு இருக்காது. நான் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் சென்றது நான் எடுத்த மிகச் சிறந்த முடிவாகக் கருதுகிறேன்." என்று சொன்னார் விஷ்ணதுளசி.
அனிஸ் லார்பி ஆய்வகத்தில் சிங்கப்பூர் இம்யூனாலஜி நெட்வொர்க்கில்(A * STAR) வேலை அனுபவப் பயிற்சி பெற்ற விஷ்ணதுளசி உயிரியல் ஆராய்ச்சி வழி பல நல்ல மாற்றங்களை செயல்
படுத்தலாம் என்று நம்புகிறார். குறிப்பாக, சிங்கப்பூரில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் இவருக்கு தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி, லீ குவான் இயூ விருதும் $700 ரொக்கமும் வழங்கியது.