கடந்த வெள்ளிக்கிழமை, புதிய கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதில் அதனை முறையாக செயல்படுத்துவதில் வழிபாட்டுத் தலங்கள் ஆயத்த நிலையில் உள்ளன.
புதிய மாற்றங்கள் ஜூன் 13ஆம் தேதி வரையில் நீடிக்கும். கோயில்களில் எந்நேரமும் அதிகபட்சமாக 50 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
குழுவாகச் சென்றால் இரண்டு பேருக்கு மேல் இருக்கக்கூடாது.குழுக்களிடையே 1 மீட்டர் சமூக இடைவெளி இருப்பதும் முக்கியம்.முதியவர்கள், நாள்பட்ட அல்லது சுவாச தொடர்பான நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கோயில்களில் சமயம் தொடர்பில்லாத எல்லா நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும்.
“அப்படி இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கோயிலுக்குள் நுழைந்தால், இரு இரு குழுக்களாக தள்ளி நின்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூறினார் இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த.ராஜசேகர்.
அர்ச்சனைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நடக்கும். முன்கூட்டியே பக்தர்கள் அர்ச்சனை சீட்டுகளை வாங்கி அவற்றை குறிப்பிட்ட அர்ச்சனை பெட்டிகளில் வைத்திட, காலை அல்லது மாலை நேரங்களில் அதற்கான பூஜை நிகழும்.
இந்து அறக்கட்டளை வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 4 கோயில்களை தவிர்த்து, மற்ற இந்து கோயில்களுக்கும் இந்த வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
வழக்கமாக கோயிலுக்குள் நுழைய தங்களது அடையாள அட்டையை பயன்படுத்தும் முதியவர்கள், இனி ‘டிரேஸ்டுகெதர்’ சாதனைத்தை அல்லது செயலியை பயன்படுத்துவது உகந்தது.
பள்ளிவாசல்களிலும் தேவாலயங்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது கொவிட்-19 பரிசோதனையின்றி, 50 பேர் வரை இத்தலங்கள் அனுமதிக்கும். பாடல் பாடுவதும் துளையிசைக்கருவி வாசிப்பதும் இங்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
“பள்ளிவாசல்களில் ஐந்து தொழுகை நேரங்கள் இருக்க, எந்நேரத்திலும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையத்தில் குறிப்பிட்ட தொழுகை நேரத்திற்கு பதிவுசெய்திருக்க வேண்டும்,” என்று விளக்கினார் ஜாமிஆ (சூலியா) பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு ஷேக் ஃபக்ருதின்.
பள்ளிவாசலின் ஃபேஸ்புக், யூடியூப் பக்கங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அவர் சொன்னார். “மக்ககளின் பாதுகாப்பைக் கருதி, ஞாயிறு ஆராதனைகளை முழுமையாக இணையத்திற்கு கொண்டு செல்ல எண்ணுகிறோம்.
‘ஸும்’ மெய்நிகர் சந்திப்புத் தளம், ‘யூடியூப்’ வாயிலாக பக்தர்கள் ஆராதனையில் இணையலாம்,” என்று தெரிவித்தார் ஈஷுனில் அமைந்துள்ள ‘லைஃப் சென்டர்’ (சிமிர்னா அசெம்பிளி) தேவாலயத்தின் போதகர் சாமுவேல் கிப்ட் ஸ்டீபன்.
இந்தியத் தேவாலயங்கள் கூட்டணியில் இடம்பெறும் 109 தேவாலயங்களும் இணையம் வழி தங்களது ஆராதனைகளை நடத்த ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.