பன்னிரண்டு வயதுக்கும் மேற்பட்ட 400,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் தேசிய இயக்கம் நேற்றுக் காலையில் தொடங்கியது. முதல் கட்டமாக வழக்கநிலை (என்), சாதாரண நிலை (ஓ), மேல்நிலை (ஏ) நிலைத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.
பீஷான் சமூக மன்றத்திற்கு இன்று தமிழ் முரசு சென்றபோது மாணவர்களும் அவர்களுக்குத் துணையாக பெற்றோர்களும் அங்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். பக்கவிளைவு குறித்த பயம் இருந்தாலும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாணவர்கள் கூறினர்.
சி.எச்.ஐ.ஜே (CHIJ) கேலோக் தொடக்கப்பள்ளியில் பயிலும் 188 தொடக்கநிலை ஆறு மாணவர்களில், 12 வயதை அடைத்திருக்கும் சுமார் 75 மாணவர்கள் தடுப்பூசிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கான தடுப்பூசி இயக்கம், பள்ளிகளிலும் சமூகத்திலும் கிருமிப் பரவலை குறைக்க தேவையான நடவடிக்கை என்றார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஷாந்தி சூரஜ் நாயர். இதில் பெற்றோரின் பங்கு அதிகமானது என்றார் அவர்.
என்ன தடுப்பூசி, எங்கு போடுவது, பக்கவிளைவுகளை எப்படிக் கையாள்வது போன்ற தடுப்பூசி பற்றிய தகவல்களை பெற்றோருக்கு ‘கேட்வே’ என்னும் தளம் வழி இப்பள்ளி வழங்குகிறது.
கன்டோன்மென்ட் தொடக்கப்பள்ளியில் 187 உயர்நிலை ஆறு மாணவர்கள் தடுப்பூசி போடத் தகுதிபெற்றுள்ளனர். குறைந்தது 75% மாணவர்களாவது தடுப்பூசி போட பதிவு செய்வர் என்று நம்புவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி மனோகரா தெரிவித்தார்.
சில காரணங்களால் சில பெற்றறோர்களால் பிள்ளைகளைத் தடுப்பூசி போட அழைத்துச்செல்ல முடியாமல் போகலாம். பள்ளி திறந்தபின் இம்மாணவர்களைத் தடுப்பூசி நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல பள்ளி ஏற்பாடு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, ஜூன் முதல் தேதி 12 வயது நிறைவடைவோருக்கும், அதற்கு மேற்பட்ட வயதுடையவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டோர் ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொள்ளலாம். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஃபைசர் பயோஎன்டெக், மொர்டனா இரண்டில் ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொள்ளலாம்.
மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆகஸ்ட் மாத வாக்கில் நிறைவுபெறும். தற்போது நாடெங்குமுள்ள சமூக மன்றங்க ளில் தடுப்பூசி போடலாம். வரும் திங்கள் கிழமையிலிருந்து கல்வி அமைச்சின் நான்கு தனிப்பட்ட நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது.