சுகாதார அமைச்சு கைவசம் வைத்து இருக்கும் சினோவேக் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை வாங்கி அவற்றைக் குறிப்பிட்ட மருந்தகங்களுக்கும் மருத்துவ மனைகளுக்கும் கொடுக்க 'ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர்' என்ற தனியார் சுகாதார பராமரிப்பு நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளது.
தன்னிடம் 200,000 குப்பி சினோவேக் ஊசி மருந்து இருப்பதாகவும் அதை விநியோகிக்கும் உரிமையைப் பெற தனியார் சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்க லாம் என்றும் அமைச்சு தெரிவித்து இருந்தது.
இதனை அடுத்து, அந்த மருந்தைப் பெற்று அதை பார்க்வே ஷெண்டன் மருந்தகங்களுக்கும் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கும் விநியோகிக்க விரும்புவதாக ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் நியோல் இயோ கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஐஎச்எச் குழுமம் சிங்கப்பூரில் செயல்படும் ஆகப்பெரிய சுகாதார மராமரப்புச் சேவை வழங்கும் அமைப்பாகும்.
மவுண்ட் எலிசபெத், மவுண்ட் எலிசபெத் நொவினா, கிளினகல்ஸ், பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனைகளை அது நடத்துகிறது.
துணை சேவைகளை வழங்கும் 40க்கும் மேற்பட்ட முதல் நிலை பராமரிப்பு மருந்தகங்களையும் நிலையங்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பையும் அது கொண்டுள்ளது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள் ஆகியோருக்கு, குறிப்பாக இப்போதைய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பொருத்தமில்லாதவர்களுக்கு மாற்று ஊசி மருந்தாக சினோவேக்கை கொடுக்க விழைகிறோம் என்று டாக்டர் இயோ கூறினார்.
இந்த ஊசி மருந்து சேவையை வழங்கக்கூடிய மருத்துவமனைகள் பற்றிய மேல் விவரங்களைத் இந்தக் குழுமம் தெரிவிக்கவில்லை.
அதோடு, சினோவேக் தடுப்பூசி விலை பற்றியும் அதற்கு எப்படி முன்பதிவு செய்வது என்பது பற்றியும் அது எதையும் தெரிவிக்கவில்லை.
சிங்கப்பூரில் சினோவேக் ஊசி மருந்தைப் பாதுகாப்பாக, முறையாக, செம்மையாகக் கையாளக் கூடிய திறமை இருப்பதை மெய்ப்பிக்கும் ஏறத்தாழ 20 தனியார் மருந்தகங்கள், தன்னிடம் உள்ள சினோவேக் மருந்தைப் பெற தேர்ந்து எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் சகாதார மராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஜூன் 11 நண்பகல் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.