இயோன் ஆர்ச்சர்ட்டில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கேக் கடையின் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணிபுரியும் ஒருவருக்கு
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர் 35 வயது மலேசியப் பெண் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று அவருக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்குச் சளி ஆகியவை ஏற்பட்டது. அவர் கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவரிடம் சென்றார்.
அவருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானதும் அவர் உடனடியாகத் தனிமைப்
படுத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட ஊழியர் கடந்த மாதம் இறுதியில் அங் மோ கியோ ஹப்பில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கிளையில் பயிற்சி பெற சென்றதாகவும் துப்புரவுப் பணிகளுக்காக அந்தக் கடை ஒருநாள் முழுவதும் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.
இயோன் ஆர்ச்சர்ட்டில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கடையை சுத்தப்
படுத்த துப்பரவுப் பணியில் நிபுணத்துவம் கொண்ட நிறுவனத்தின் சேவை நாடப்பட்டதாக ஃபோர் லீவ்ஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் திரு கோஜி தனாபே தெரிவித்தார்.
ஃபோர் லீவ்ஸின் இயோன் ஆர்ச்சர்ட் கிளை நேற்று முன்
தினத்திலிருந்து மூடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஊழியர் அங் மோ கியோ ஹப்பில் உள்ள ஃபோர் லீவ்ஸ் கடைக்குச் சென்ற 14 நாட்களுக்கு மேலாகிவிட்டதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களைத் தனிமைப்படுத்த தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருப்பதாக திரு தனாபே கூறினார்.
இதற்கிடையே, உணவு மூலம் கொரோனா கிருமிப் பரவல் குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ரேனர் டான் தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் உணவுப் பொட்லங்கள் வழியாக கொவிட்-19 கிருமி பரவுவதற்கான ஆதாரம் இல்லை என்று அவர் கூறினார்.
கடை ஊழியர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் குறைவு என்றபோதிலும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்றார் டாக்டர் டான்.