அதிகமான வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் வேலைக்காக சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
"இது, கொவிட்-19 பரவல் தொடங்கியதில் இருந்து நமது நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடியைத் தணிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணையவும் அவர்களின் இல்லப் பணிப்பெண்கள் மீண்டும் வந்து சேரவும் இந்நடவடிக்கை உதவும்," என்று அமைச்சர் கான் சொன்னார்.
வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்படுவதை அரசாங்கம் எவ்வாறு உறுதிசெய்யும் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிதவள அமைச்சும் வர்த்தக, தொழில் அமைச்சும் பிற அமைச்சுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கான் பதில் உரைத்தார்.
இருப்பினும், அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வர அனுமதிப்பது என்பது அவர்கள் நாட்டின் கொவிட்-19 தடுப்பூசி விகிதத்தையும் அங்கு நிலவும் கொரோனா சூழலையும் பொறுத்தது என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான் கூறினார்.
"ஆகையால், வெளிநாடுகளில் இருந்து கொவிட்-19 பாதிப்பு வராமல் தடுக்க, நாட்டளவில் கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அந்த ஊழியர்களின் நாடுகளிலும் அறிமுகப்படுத்த அந்நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்," என்றார் அவர்.
"அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக இங்கு வந்து சேரும் வகையில் நம்மால் எல்லைகளைத் திறக்க முடிவதை உறுதிப்படுத்த பன்முனை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்," என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் அதிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் நாட்டின் பொருளியல் மீட்சிக்கும் வேலை செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வர அனுமதிப்பது மிக அவசியம் என்று திரு கான் குறிப்பிட்டார்.
பங்ளாதேஷ், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அண்மையில் பயணம் சென்றோர் சிங்கப்பூர் வரத் தடை விதித்திருப்பது, வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் துறைகளை அதிகமான நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாகச் சொல்லப் படுகிறது.