சிங்கப்பூரிலுள்ள கேளிக்கைக்கூடங்களுடன் தொடர்புடைய கிருமித்தொற்றுக் குழுமத்தில் மொத்தம் 41 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூரின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் இன்று தெரிவித்தார்.
ட்ரீம்க்ரூஸ் கப்பலிலுள்ள 40 வயது பயணி ஒருவர் இந்த புதிய சம்பவங்களில் அடங்குவார்.
குழுமத்தைச் சேர்ந்த முதலில் பாதிக்கப்பட்ட நபர், வியட்னாமைச் சேர்ந்த ஒரு பெண். இங்கு குறுகிய கால அனுமதி அட்டையின்கீழ் வந்த அப்பெண், நுரையீறல் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவரைக் காணச் சென்றார்.
சோதனை செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு கொவிட்-19 இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் தங்கியிருந்த வீட்டில் மற்றும் சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. பல்வேறு கேளிக்கைக் கூடங்களுக்கு அந்தப் பெண் சென்றிருப்பதாகவும் இணைப் பேராசிரியர் மாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போதைய கட்டுப்பாட்டுத் தளர்வை கிருமித்தொற்றுக் குழுமம் பாதித்துவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், இது குறித்து அரசாங்கம் நெடுநேரமாக யோசித்துள்ளதாகவும் தற்போது பலருக்குத் தடுப்பூசி போடப்பட்டதால் இந்த முடிவு இப்போதைக்கு மாறாது என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் முதல் தடுப்பூசியைப் போட்டிருப்பதாகவும் 30 விழுக்காட்டினருக்கு அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டிருப்பதாகவும் திரு ஓங் சுட்டினார்.