கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அறிகுறியின்றி கிருமி தொற்றினாலோ அல்லது இலேசான அறிகுறிகள் தென்பட்டாலோ, மருத்துவமனைகளுக்குப் பதிலாக சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் அவர்கள் நேரடியாக அனுமதிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானால், 21 நாள்களுக்குப் பதிலாக 14 நாள்களில் அவர்கள் வீடு திரும்பிவிடுவதாக அவர் கூறினார். அதன் பின்னர் ஏழு நாள்களுக்கு அவர்கள் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவர்.
அவர்களுக்குக் 'கிருமித்தொற்று இல்லை' என்று பரிசோதனை முடிவுகள் காட்டினாலோ அவர்களிடம் கிருமி பாதிப்பு குறைவாக இருந்தாலோ இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.
அத்தகையோர் இன்னும் முன்கூட்டியே வீடு திரும்ப முடியுமா என்பது பற்றி மேலும் மறுஆய்வு செய்யப்படுவதாக அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
"கொரோனா கிருமியுடன் இணைந்து வாழ நாம் கற்றுக்கொள்ளும்போது, நமது சுகாதாரப் பராமரிப்பு நெறிமுறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கொரோனா கிருமி நிரந்தரமாக இருந்துவிட்டால், ஒரு நாளைக்கு 200 அல்லது அதற்கும் மேற்பட்டோர் அதனால் பாதிக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானதாக இராது," என்றார் அவர்.
கொரோனா தொற்றியோர் நேரடியாக சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களுக்குச் செல்வது பற்றிக் கருத்துரைத்த திரு ஓங், 17 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களிடத்தில் அந்த நடைமுறை ஏற்கெனவே நடப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த வரம்பு 17 முதல் 59 வயதுவரை என்று கடந்த வாரம் உயர்த்தப்பட்டது.
இந்த மாற்றத்தால், இனி கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் இருந்தபடி உடல்நலம் தேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஒருவேளை 80 விழுக்காட்டினர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், சிலர் வீட்டிலேயே குணமடையும் வகையில் அடுத்த கட்டத்திற்கும் அரசாங்கம் திட்டமிடும் என்று அமைச்சர் சொன்னார்.
புதிய இயல்புநிலையின் ஒரு பகுதியாக, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வது அதிகப்படுத்தப்படும்.
தனிமைப்படுத்திக்கொள்ள தங்களது வீடே உகந்த இடமாக இருந்தால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும்.
"தனிமைப்படுத்தும் உத்தரவின்கீழ் இருப்போரில் 40 விழுக்காட்டினர்வரை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் வாரங்களில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, அவ்விகிதம் 50 விழுக்காட்டைத் தாண்டலாம்," என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோரை கொரோனா தொற்றினால் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டதால் இந்த நடவடிக்கைகள் சாத்தியமே என்றும் அவர் கூறினார்.