கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை பெருகியதைத் தொடர்ந்து தனிமை உத்தரவுக்கான இருப்பிடங்களாகச் சேவையாற்றும் ஹோட்டல்களின் எண்ணிக்கை நேற்று முன்தின நிலவரப்படி 90க்கு மேல் சென்றுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த மே மாதம் சுமார் 70ஆக இருந்தது.
தொற்று பரவத் தொடங்கிய நேரத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹோட்டல்கள் தனிமை உத்தரவுக்கான இடங்களாகச் சேவையாற்றி வருகின்றன.
அரசாங்க தொற்று தடைக்காப்புக்கான இடம் அல்லது கட்டாய இல்லத் தனிமைக்கான இருப்பிடம் என்னும் நோக்கங்களுக்காக அவை செயல்படுகின்றன.
நிலைமைக்கேற்ப ஹோட்டல்கள் இவ்வாறு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதேநேரம் உள்ளூர் தொற்று காரணமாக தனிமைக்கான தேவை உள்ளோர் அரசாங்க தொற்று தடைக்காப்புக்கான இடத்தில் வைக்கப்படுகின்றனர்.
கொவிட்-19 நோய் தொற்றியோருடன் நெருக்கத்தில் இருப்போருக்கு இந்தத் தனிமைப்படுத்தல் தேவைப்படும்.
மேலும், இந்த இருவிதத் தனிமைப்படுத்தலுக்கும் உத்தரவிடப்பட்டவர்கள் நிலைமை மேம்பாட்டைப் பொறுத்து தங்களது வீடுகளிலும் அதனை நிறைவேற்றலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி சுமார் 14,000 பேர் தனிமை உத்தரவில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறக்குறைய 5,000 பேர் அரசாங்க தொற்று தடைக்காப்புக்கான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தரவு தெரிவிக்கிறது.
ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகம், கேடிவி கூடங்கள் என இரு தொற்றுக் குழுமங்களும் இதர சிறு சிறு தொற்றுக் குழுமங்களும் உருவெடுத்த பின்னர் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த வாரம் 14,770 பேருக்கு தனிமை உத்தரவு வழங்கப்பட்டது. இது சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,110 பேர். இருப்பினும் இந்த வாரம் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரையில் அந்த விகிதம் 1,490 என குறைந்துவிட்டது.
ஹோட்டல் ஒன்று புதிதாக தனிமைக்கான உத்தரவுக்கு ஒதுக்கப்
படும்போது அங்குள்ள ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சி தேவைப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடுமையான நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அந்த ஹோட்டல்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் உத்தரவில் இருப்போரின் பாதுகாப்புக்கும் ஊழியர்களின் பாதுகாப்புக்கும் இது இவ்வாறு செய்வது அவசியம் என்றும் அது தெரிவித்துள்ளது.
மே மாதம் 70ஆக இருந்த எண்ணிக்கை 90க்கு உயர்ந்தது