ப. பாலசுப்பிரமணியம்
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் பயின்றபோது 'பயோடீசல்' எரிபொருள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் சந்தியாஷினிக்கு ஆர்வம் துளிர்விட்டது. அன்று தொடங்கிய அந்த ஆர்வமே, மதிப்புமிக்க உபகாரச் சம்பள விருதை பெறுவதற்கு இன்று இவருக்கு உதவியுள்ளது.
நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பள விருதை இம்மாதம் பெற்ற 16 மாணவர்களில் சு.சந்தியாஷினியும் ஒருவர்.
சிங்கப்பூரின் சுற்றுப்புற நிலைத்தன்மையையும் உணவு, தண்ணீர் வளங்களையும் பாதுகாத்திடும் திறனாளர்களை உருவாக்கும் நோக்கில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் படிப்புடன் கூடிய நிர்வாகம் தொடர்பான இளநிலைப் பட்டக் கல்வியைப் பயிலும் இவர், பட்டப்படிப்பு முடிந்ததும் தேசிய சுற்றுப்புற வாரியத்தில் பணியாற்றுவார்.
உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தேசிய அளவிலான போட்டிகளுக்கு அவற்றைச் சமர்ப்பித்து, ஆராய்ச்சி செயல்திட்டத்திற்கு நிதி ஆதரவு கிடைக்க, அது தன் முயற்சிகளுக்கு உத்வேகம் தந்ததாக 19 வயது சந்தியாஷினி குறிப்பிட்டார்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் தொற்றுநோய்ப் பிரிவில் பணியாற்றும் 56 வயது தாயார் திருமதி ரெ.சாரதாமணி, தம் வேலை அனுபவங்களை சந்தியாஷினியுடன் பகிர்ந்துகொள்ள, அவருக்கு உயிரியல் துறை ஆராய்ச்சியில் நாட்டம் அதிகரித்தது.
தொடக்கக்கல்லூரியில் படித்தபோது, விடுமுறைக் காலத்தில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் கிருமித்தொற்றுப் பிரிவில் மாணவர் பயிற்சியாளராகப் பணிபுரிந்த சந்தியாஷினி, அங்கு தொற்று நோய்ப் பரவல் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தார்.
பருவநிலை மாற்றம் குறித்து அண்மைய வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டங்கள் பாராட்டுக்குரியது என்று கூறிய சந்தியாஷினி, சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் இன்னும் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டால் அது சுற்றுப்புறத்தின் நிலைத்தன்மைக்குப் பெரும் பங்களிக்கும் என்று கருதுகிறார்.
"பொதுச் சுகாதாரத்தைப் பொறுத்த வரையில், கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் ஏராளமான வாழ்க்கைமுறை மாற்றங்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற அதிருப்தி மக்களிடையே நிலவலாம். ஆனால் இம் மாற்றங்கள் தேவையானவை. அரசாங்க அமைப்புகள் இணைந்து கண்டறியும் தீர்வுகள், கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன," என்றார் சந்தியாஷினி.
ஆராய்ச்சிப் பணிகளைத் தவிர, 'ஹார்ட்வேர்' (Heartware Tuition Programme) துணைப்பாடத் திட்டத்தின்கீழ் வசதிகுறைந்த மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்த சந்தியாஷினி, தற்போது அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
பல்கலைக்கழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று, புற்றுநோய் போன்றவை தொடர்பில் உயிரியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவியான சந்தியாஷினி.