மது போதையில் சூடாக்கப்பட்ட உலோகக் கரண்டியால் தனது பணிப்பெண்ணின் இடது கைக்கு சூடவைத்த ஆடவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதற்கு மறுநாளும் ராஜமாணிக்கம் சுரேஷ் குமார் என்ற அந்த 35 வயது ஆடவர் மது போதையில் வீடு திரும்பியிருக்கிறார். அதற்குப் பின்னர் அவர் பணிப்பெண்ணின் இடது கையை இழுத்து அறைக்குள் தள்ளினார். இந்தியாவிலிருந்து வந்த திருவாட்டி வடிவேல் கௌதமியைத் தாக்கியதாகவும் அவரைச் சட்டவிரோதமாக பலவந்தப்படுத்தியதாகவும் ராஜமாணிக்கத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட திருவாட்டி கௌதமி முதன்முறையாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.
மாதம் 400 வெள்ளி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர் ஜூரோங் வெஸ்டில் ராஜமாணிக்கத்தின் வீட்டில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வேலை செய்து வந்தார்.
ராஜமாணிக்கம் அவரின் கைக்கு சூடு வைத்தபோது திருவாட்டி கௌதமி சமைத்துக்கொண்டிருந்தார். சூடு வைத்த பிறகு ராஜமாணிக்கம் சமையலறையைவிட்டுச் சென்றதாகவும் திருவாட்டி கௌதமி தொடர்ந்து சமையலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
மறுநாளும் இரவு சுமார் 10.30 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜமாணிக்கம், மாமியார் வீட்டில் இருந்த தனது மகளை அழைத்து வருமாறு கௌதமியிடம் கூறியிருக்கிறார்.
தனது வேலை நேரம் முடிவுற்றதால் அவ்வாறு செய்ய மறுத்த திருவாட்டி கௌதமியிடம் இரவு 10 மணிக்குள் தூங்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு சொன்ன பிறகும், அவர் ஏன் தூங்கவில்லை எனக் கேட்டார். அதன் பின்னர் அவரது இடது முழங்கையை இழுத்து அறைக்குள் தள்ளினார்.