விபத்து: கடும் காயங்கள் விளைவித்த மருத்துவருக்குச் சிறை, அபராதம்

விபத்து: கடும் காயங்கள் விளைவித்த மருத்துவருக்குச் சிறை, அபராதம்

2 mins read
65fa14d9-3bf5-4018-a3c3-cb101bf47c03
அனைத்து வகை வாகனங்களை ஓட்ட இவருக்கு பத்தாண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாலை விபத்துக்குக் காரணமாக இருந்த 76 வயது மருத்துவருக்கு நான்கு நாள்கள் சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அனைத்து வகை வாகனங்களையும் ஓட்ட அவருக்கு பத்தாண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவுடன் கார் ஓட்டி, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த இருவருக்குக் கடுமையான காயங்களை விளைவித்த குற்றத்தை ரோஜர் பாங் ஹெங் மன் ஒப்புக்கொண்டார்.

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இரவு 8 மணி அளவில், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் இந்த விபத்து நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் தமது காரை பாங் வலது பக்கம் திருப்பியதை அடுத்து, விபத்து ஏற்பட்டது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய திரு முகம்மது ஸகிர் சக்காரியாவும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த திருவாட்டி ஐஷா நபிலா ஜைனியும் காயமுற்றனர்.

21 வயது முகம்மது ஸகிரின் மூன்று கால் விரல்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 22 வயது திருவாட்டி ஐஷாவுக்கு வலது கால் உட்பட பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள்மீது மோதியதை அடுத்து. பாங் தமது காரிலிருந்து வெளியேறி காயமடைந்த இருவருக்கும் உதவினார்.

வேக வரம்பைத் தமது கட்சிக்காரர் மீறவில்லை என்றும் கடந்த 57 ஆண்டுகளாக அவருக்கு கார் ஓட்டும் அனுபவம் உள்ளது என்றும் பாங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். சாலை விதிமுறையை மீறியதாக அவர்மீது இதற்கு முன்பு எவ்விதப் பதிவும் இல்லை என்றார் அவர்.

கண்புரையால் பாங் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது அவரது கண் பார்வையைப் பாதித்திருக்கக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அதை நீதிபதி ஏற்க மறுத்தார். கவனக்குறைவுடன் பாங் காரை வலது பக்கம் திருப்பியதால் விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.