தொடக்கப்பள்ளி, சிறப்புக் கல்வி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வீட்டிலிருந்தே கற்கும் ஏற்பாடு ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று அறிவித்தது.
அக்டோபர் 8ஆம் தேதி சிறார் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாளையும் சேர்த்து பார்க்கும்போது வீட்டிலேயே கற்றல் ஏற்பாடு இரண்டு வார காலம் முழுமையாக நடப்பில் இருக்கும் என்று அந்தப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
மாணவர்கள் அக்டோபர் 11ஆம் தேதி திங்கட்கிழமைதான் பள்ளிகளுக்குத் திரும்புவார்கள்.
இரண்டு வார காலம் இந்த ஏற்பாடு நடப்பில் இருக்கும். அதை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
"கொவிட்-19 தொற்று அதிகமாகி வருகிறது. இதில் மேலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே கற்றல் ஏற்பாடு நீட்டிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியில் இன்னமும் தகுதிபெறாத சிறார்களைப் பாதுகாக்க இந்த ஏற்பாடு இடம்பெறுவதாக சிறப்புப் பணிக்குழு தெரிவித்து உள்ளது.
வீட்டிலேயே கற்கும் ஏற்பாடு செப்டம்பர் 27லிருந்து அக்டோபர் 6ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று ஏற்கெனவே கல்வி அமைச்சு அறிவித்து இருக்கிறது.
12 மற்றும் அதற்கும் குறைவான வயதுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே கற்கும் ஏற்பாட்டை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை தனியார் கல்வி நிலையங்களும் நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கும் என்று சிறப்புப் பணிக்குழு தெரிவித்து உள்ளது.
இருந்தாலும் இத்தகைய தனியார் கல்வி நிலையங்களில் இடம் பெறும் பள்ளிக்கு முந்தைய சேவைகள் தொடர்ந்து நடக்கும்.
இந்தக் காலகட்டத்தின்போது 12 மற்றும் அதற்கும் குறைவான வயதுள்ள மாணவர்களுக்கான நேரடி துணைப்பாட மற்றும் செரிவாக்க வகுப்புகள் இணையம் மூலம் நடக்கவேண்டும்.
அல்லது அவை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று பணிக்குழு தெரிவித்துள்ளது.
பாலர்பள்ளிகள், கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்பதால் முடிந்தால் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்கும்படி பெற்றோர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 25 முதல் 29 வரை விடுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.