வீட்டில் குணமடைதல் திட்டத்துக்கு உதவும் பொருட்டு, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்குத் தொலைமருத்துவ சேவையை வழங்க முன்வந்துள்ளனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்துள்ள வேளையில், இதன் மூலம் தொலைமருத்துவ சேவையை தற்போது வழங்கி வரும் நடத்துநர்களின் பளு குறையும்.
தங்கள் நோயாளிகளை நன்கு அறிந்துள்ள மருத்துவர்கள் நோய் பற்றிய அவர்களின் அச்சத்தைக் குறைத்து, அவர்களுக்குள்ள நோய் பற்றிய தகவல்களின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை அளிக்க முடியும்.
வீட்டில் குணமடைதல் திட்டத்தில் சேர இதுவரை 300க்கு மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிராங்கூனில் உள்ள மிஷன் மருந்தகத்தில் பணியாற்றும் குடும்ப மருத்துவரான டாக்டர் லியோங் சூன் கிட் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
டாக்டர் லியோங்கின் தொடக்ககாலப் பராமரிப்புக் கட்டமைப்பின் கீழ் கடந்த வாரம் 27 தனியார் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு 24 மணிநேர தொலைமருத்துவ சேவை வழங்க இணக்கம் தெரிவித்தனர்.
தங்கள் நோயாளிகளை அணுக்கமாகக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கான வளங்களை ஒன்றுதிரட்டும் மெய்நிகர் குழுக்களை அமைப்பதுதான் தொடக்ககாலப் பராமரிப்புக் கட்டமைப்பு.
அத்துடன் இந்தத் தனியார் மருத்துவர்கள், நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும்போது கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும் தயாராக இருப்பார்கள்.
இந்த வீட்டில் குணமடைதல் திட்டத்தில் சேரும் எல்லா மருத்துவர்களும் தொலைமருத்துவ சேவை தொடர்பான கட்டாய பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.
"தனியார் மருத்துவர்கள் நமது சுகாதாரப் பராமரிப்பு முறையில் அடித்தளம். ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி, அவருக்கு அதற்கான அறிகுறிகள் இருந்தால் அவர் தங்கள் தனியார் மருத்துவரை அணுகலாம். அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள்.
டாக்டர் லியோங், அண்மையில்வீட்டில் குணமடைந்து வரும் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியான நோயாளிக்குத் தகுந்த மருத்துவ ஆலோசனை வழங்கினார். அந்த நோயாளி இப்போது நன்கு குணடைந்து வருவதாக அவர் சொன்னார்.
சுகாதார அமைச்சையும் தொலைமருத்துவ சேவை வழங்குநர்களையும் தொடர்புகொள்ள சிரமத்தை எதிர்நோக்கிய நோயாளிகள் பலர் தங்களை நாடியதாக தனியார் மருத்துவர்கள் பலர் கூறினர்.
"தற்போது நேரடி நோய் மதிப்பீடு பெற விரும்புவோர் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
"அதற்குப் பதிலாக தொலைமருத்துவ சேவை அளிக்கும் தனியார் மருத்துவர்களை நாடி அதே மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்," என்றார் பொங்கோலில் உள்ள கென்னத் டான் மருந்தகத்தின் குடும்பநல மருத்துவரான டாக்டர் கென்னத் டான்.