எரிசக்தி விலை இரட்டிப்பானதை அடுத்து செலவுகள் அதிகரிக்கவுள்ளதால், மின்சாரத்தை அளவுடன் பயன்படுத்தும்படி வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு திரு கான் நேற்று எழுத்துபூர்வ பதில் அளித்தார்.
எரிசக்தி விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இருமடங்குக்கு மேல் அதிகமாகிவிட்டதையும் அது சீனா, ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவற்றை பாதித்துள்ளதையும் அவர் சுட்டினார்.
உலகளாவிய எரிசக்திச் சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள், தனது எரிசக்தித் தேவைகளில் கிட்டத்தட்ட 100 விழுக்காட்டையும் இறக்குமதி செய்யும் சிங்கப்பூரைக் கட்டாயம் பாதிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
எரிசக்தி விரைவில் ஏற்றம் காரணமாக அடுத்த காலாண்டில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பாதிப்பை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி திரு முரளி பிள்ளை கேட்டிருந்தார்.
வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3.1% உயர்த்தப்படும் என்று எஸ்பி குழுமம் செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்குப் பின்னர் மின்கட்டணம் இப்போதுதான் இவ்வளவு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.