தடுப்பூசி போட்ட பணிப்பெண்களுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்: துணை அமைச்சர்
தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள புதிய பணிப்பெண்களை சிங்கப்பூருக்கு அழைப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கியது.
அந்த வகையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பணிப்பெண்கள் பாதுகாப்பான பயணத் தளத்தின் மூலம் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வரலாம்.
இதுபற்றி நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், "அரசாங்கம் நுழைவு அனுமதி வரம்பை அதிகரித்திருந்தாலும், பொதுச் சுகாதாரக் காரணங்களுக்காகவும் குடும்பங்களின் பராமரிப்புத் தேவையைப் பொறுத்தும் அந்த எண்ணிக்கை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கப்படும்.
"நுழைவு அனுமதிக்குக் கிடைத்திருக்கும் அதிக விண்ணப்பங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் சில முதலாளிகளுக்கு உடனடியாக நுழைவு அனுமதி கிடைக்காது. அவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்," என்றும் கூறினார்.
உடனடியாக இல்லப் பணிப்பெண்கள் தேவைப்படுவோர் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கம் நடத்தும் வர்த்தகத் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் அதிகம் தேவைப்படுவதைக் கருத்தில்கொண்டு இந்த முன்னோடித் திட்டம் நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டுப் பங்காளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றும் அச்சங்கம், பணிப்பெண்கள் அவர்கள் நாட்டிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கு முன் கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்ற உட்படுத்தப்படுவார்கள்.
பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளின் பணிப்பெண்கள் இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்குள் இவ்வாண்டு ஜூலையிலிருந்து வந்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணிப்பெண்கள், இங்கு வந்து சேர்ந்த இரண்டு மாதங்களுக்குள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
"வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு நுழைவு அனுமதி அதிகரித்திருப்பதால், இன்னும் அதிகமான குடும்பங்களின் பாரமரிப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று நம்புகிறேன்.
"இந்தக் காலகட்டத்தில் நானும் எனது அமைச்சின் சகாக்களும் அதிகமான வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் நுழைவு அனுமதிக்கு ஏற்பாடு செய்வதுடன், சிங்கப்பூரில் கொவிட்-19 சூழ்நிலை சிறப்பாக நிர்வகிக்கப்படுவதையும் உறுதிசெய்வோம்," என்றும் துணை அமைச்சர் கான் விவரித்தார்.