இதுநாள்வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏஸ்ஐஏயின் 'போயிங்-737-8' ரக விமானங்கள் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் சிறகை விரித்துப் பறக்கவிருக்கின்றன.
பயணிகளுக்கு பயணக் களைப்பு தெரியாத அளவுக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் விமானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கால்களை நீட்டிக்கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், பொழுதுபோக்குத் திரைகள், புதுப்பிக்கப்பட்ட அறைகள் ஆகியவை செய்யப்பட்ட மாற்றங்களில் சில.
வர்த்தகப் பிரிவில் செல்லும் பயணிகள் தங்களுடைய இருக்கைகளை படுக்கையாக விரித்துக் கொள்ளமுடியும். இதனால் சாய்வான இருக்கையில் சாய்ந்துகிடக்க வேண்டிய அவதி இருக்காது.
முன்பு போயிங்-737-8 விமானங்கள் சில்க்ஏர் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டன.
இவ்வாண்டின் முற்பகுதியில் எஸ்ஐஏவுடன் சில்க்ஏர் நிறுவனம் ஒருங்கிணைப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் வாரங்களில் குறுகிய, நீண்டதூர விமானச் சேவைகள் படிப்படியாகத் தொடங்கப்படும் என்று எஸ்ஐஏ நேற்று அறிவித்தது.
புருணை, கம்போடியா, இந்தோனீசியா, மலேசியா, மாலத்தீவு, நேப்பாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமானச் சேவைகள் தொடங்கப்படும் என்று அது கூறியது.
அேத சமயத்தில் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப விமானச் சேவைகள் இருக்கும் என்று எஸ்ஐஏ குறிப்பிட்டது.
'போயிங்-737 மேக்ஸ் 8' என்றும் அழைக்கப்படும் 737-8 ரக விமானங்களில் புதிய மேம்பட்ட வசதி களுக்கு 230 மில்லியன் வெள்ளியை எஸ்ஐஏ முதலீடு செய்துள்ளது.
இந்த புதுப்பிப்புத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் கொவிட்-19 காரணமாக விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டதால் புதுப்பிப்புப் பணிகள் தாமதமாகின.
செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஐஏயின் வர்த்தகப் பிரிவு நிர்வாக உதவி தலைவர் லீ லிக் ஹிசின், முன்னைய சில்க்ஏர் விமானங்கள் பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தைத் தரும் அளவுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
"உலக அளவில் சிறந்த சேவையாகவும் வட்டாரத்தில் இதற்கு ஈடான சேவைகள் இல்லாத வகையிலும் சேவை வழங்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.