அறிவியல், தொழில்நுட்பத்தை பெண்கள் சிறுவயதிலேயே கற்க வேண்டும் என்று நேற்று நடந்த குழு விவாதிப்பில் ஆலோசனை கூறப்பட்டது.
பிற்காலத்தில் பெண்கள் அறிவியல், தொழில்நுட்ப வாழ்க்கைத்தொழிலில் ஈடுபட அது அவசியம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த அந்தக் குழு விவாதிப்பில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
தொழில்நுட்பத் துறையில் அதிக பெண்கள் ஈடுபாடு என்பது பற்றி அதில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்க வர்த்தக அமைச்சும் சிங்கப்பூர் தொடர்பு, தகவல் அமைச்சும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்தன.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகை அளித்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமொண்டோ அதில் உரையாற்றினார். அமெரிக்காவின் ரோடி தீவின் ஆளுநராக தான் இருந்தபோது, அரசாங்கப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாட வகுப்பு அறிமுகமானதை அவர் நினைவுகூர்ந்தார்.
பாலர்பள்ளிகளில் ஐந்து வயதுப் பிள்ளைகள் கணினி அறிவியலைக் கற்கத் தொடங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட பலன்கள் வியக்கத்தக்கவையாக இருந்ததாகவும் திருவாட்டி ரைமொண்டோ எடுத்துக்கூறினார்.
"சிறுமிகள் கணினி அறிவியலுக்கு அறிமுகமானால் இயற்கையாகவே அதைக் கற்க அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுவிடும். பின்னாளில் அவர்கள் தொழில்நுட்பத் துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
குழு விவாதிப்பில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, சிறுவயதிலேயே தொழில்நுட்ப ஆற்றல்களைக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப் படவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
"சிறுவயதிலேயே இதைத் தொடங்க வேண்டி இருக்கிறது. எடுத்துக்காட்டாக நம் பள்ளிகளில் 10 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு பிள்ளையும் வேடிக்கையாக கணினி நிரலிடுதலைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்," என்றாரவர்.
தொடக்கப்பள்ளி மேல்நிலை மாணவர்கள் அனைவருக்கும் கணினி நிரலிடுதல் செரிவாக்க வகுப்புகள் 2020 முதல் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதையும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
உலகளவில் பார்க்கையில் தொழில்நுட்ப ஊழியர் அணியில் பெண்களின் எண்ணிக்கை சராசரியாக 28% ஆக இருக்கிறது. இது சிங்கப்பூரில் 41% ஆக இருக்கிறது.