பழைய போலிஸ் பயிற்சிக் கழகத்தில் உள்ள ஆறு கட்டடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படும். எதிர்காலத்தில் மவுண்ட் பிளசண்ட் வட்டாரத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்பட்டாலும் அந்த ஆறு கட்டடங்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் புதிய திட்டத்துடன் அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும்.
பழைய போலிஸ் பயிற்சிக் கழகம் அமைந்துள்ள இடத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட மரபுடைமைத் தாக்கம் தொடர்பான ஆய்வுக்குப் பிறகு கட்டடங்களைப் பாதுகாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட இருக்கும் கட்டடங்களில் நான்கு கட்டடங்கள் அந்த வட்டாரத்தில் அமைக்கப்பட இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைக்குள் இருக்கும். மற்ற இரண்டு கட்டடங்கள் புதிய குடியிருப்புப் பேட்டைக்குச் சற்று வெளியில் இருக்கும்.
பழைய போலிஸ் பயிற்சிக் கழகம் 1929ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2005ஆம் ஆண்டு வரை அது இயங்கியது. அதன் பிறகு சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள உள்துறை அமைச்சுக் குழு பயிற்சிக் கழகக் கட்டடத்துக்கு போலிஸ் பயிற்சிக் கழகம் இடம் மாறியது.
மவுண்ட் பிளசண்ட்டில் கட்டப்பட இருக்கும் புதிய குடியிருப்புப் பேட்டைக்குள் இருக்கும் நான்கு கட்டடங்கள் 1926ஆம் ஆண்டுக்கும் 1930ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டவை. அவற்றின் பழைமை பாதுகாக்கப்பட்டு புதிய பயன்பாட்டுக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
"சிங்கப்பூரின் போலிஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது பிரதிபலிக்கிறது. முன்பு பயிற்சிக் கழகத்தில் மரத்தால் செய்யப்பட்ட கட்டடங்கள் இருந்தன. தற்போது நமது போலிஸ் படையில் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்த புதிய பயிற்சிக் கழகம் இயங்கி வருகிறது," என்றார் அமைச்சர் லீ.
"பாதுகாக்கப்படும் பழைய கட்டடங்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசிய போலிஸ் படைகளிடையே உள்ள ஒற்றுமையைக் குறிக்கும் சின்னமாக உள்ளன.
"அதுமட்டுமல்லாது அவை பாரம்பரிய கட்டட அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள். எனவே, அவை பாதுகாக்கப்படும்," என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியவை தெரிவித்தன.