இயோ சூ காங், 2025ஆம் ஆண்டு வாக்கில் வண்ணமயமான குடியிருப்புப் பேட்டையாகத் திகழும். புளோக்குகளில் பெரிய பெரிய எழுத்துகளில் கண்கவரும் வண்ணங்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருக்கும்.
நினைவாற்றல் இழப்பு குறைபாடு உள்ளவர்கள் எளிதாக தங்கள் வீடுகளை அடையாளம் கண்டு செல்ல முடியும்.
இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கி சிங்கப்பூரில் அமையும் முழுமையான முதலாவது நகராக இயோ சூ காங் திகழும். இயோ சூ காங் சமூக மன்றத்தில் நேற்று இயோ சூ காங் நாள் கொண்டாட்டங்கள் நடந்தன.
அப்போது ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை என்ற அமைப்பும் அந்தத் தொகுதியும் இந்த அறிவிப்பை விடுத்தன. தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். வழுக்காத தரைக்கற்கள், கூரையுடன் கூடிய நடைபாதைகள், கைப்பிடிக் கம்பிகள் உள்ளிட்ட பலவும் நடமாட்டப் பிரச்சினை உள்ள மக்களுக்குப் பெரிதும் உதவும்.
இயோ சூ காங்கில் முதியோர் அதிகம் வசிக்கிறார்கள். நினைவாற்றல் இழப்பு பாதிப்பு உள்ளவர்களும் அங்கு கணிசமாக இருக்கிறார்கள். அங்குள்ள வீவக குடியிருப்புப் பேட்டைகளிலும் லெண்டோரில் உள்ள தனியார் குடியிருப்புப் பேட்டையிலும் திட்டம் மேற்கொள்ளப்படும்.
இயோ சூ காங் சமூக மன்றம் மேம்பட இருக்கிறது. மேம்பாட்டுப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி 2023ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சமூக மன்ற வடிவமைப்பிலும் பல்வேறு அம்சங்களிலும் மின்னிலக்க தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும்.
பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதிய மேம்பாடுகள் காரணமாக குடியிருப்பாளர்களுக்கு வசதிகள் அதிகமாகும். சிறந்த வசிப்பிட சூழலும் மேலும் எல்லாரையும் உள்ளடக்கும் சமூகமும் உருவாகும் என்றும் ஃபேஸ்புக்கில் பிரதமர் லீ தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இயோ சூ காங் குடியிருப்பாளர்களையும் அடித்தள தொண்டூழியர்களையும் சிறப்பிக்கும் வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒய்சிகே40 (YCK40) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
250க்கும் மேற்பட்ட குடிமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.