சிங்கப்பூர்ச் சமுதாயம் பன்மயத் தன்மையுடன் இருந்தாலும் வளர்ச்சியடைந்த இந்நாட்டில், வேற்றுமைகளைச் சமாளிப்பதில் சமுதாயத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று சமூக, கலாசார இளையர் துறை அமைச்சர் திரு எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
இன, சமய அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய ஆக்கபூர்வ கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் ஹேஷ்பீஸ் மன்றத்தின் முதல் ஆண்டிறுதி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய திரு டோங் இதனைக் கூறினார்.
சமுதாய ஒற்றுமை குலையாமல் அரசாங்கம் விதிமுறைகளை உருவாக்குகிறது. ஒற்றுமையைப் பேண மக்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மக்களும் அரசாங்கமும் பங்காளிகள். எனவே, இதுபோன்ற கலந்துரையாடல்கள் தேவை என்று திரு டோங் கூறினார்.
சகிப்புத்தன்மை என்ற நிலையைத் தாண்டி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நிலைக்கு முன்னேற புரிந்துணர்வு தேவை என்று கூறிய திரு டோங், பல சமயங்களில் புண்படுத்தும் விதமாகப் பேசுவோர் பகைமை உணர்வுடன் அவ்வாறு செய்வதில்லை என தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
அறியாமையினாலும் புரிதல் இல்லாததாலும் தங்களுக்கு ஏற்படும் பதற்றத்தைச் சிலர் தவறாக வெளிப்படுத்துகின்றனர். இந்தப் புரிந்துணர்வை மக்களிடையே கலந்துரையாடல் வழியாக ஏற்படுத்துவது அவசியம் எனக் கருதுவதாக அவர் கூறினார்.
'ஹியூஒன்' அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் ஏறக்குறைய 40 பேர் நேரடியாகவும் 60 பேர் மெய்நிகர் வழியாகவும் பங்கேற்றனர். சமுதாயத்தில் சமய நல்லிணக்கத்தை வளர்க்க ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நஸ்ஹத் ஃபாஹிமா, 36, தொடங்கிய இயக்கம் இவ்வாண்டு ஜூன் மாதம் ஒரு மன்றமாக அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
நல்லிணக்கம் மீது ஆர்வம் கொண்டுள்ள இளையர்களின் ஆறு ஆண்டு உழைப்பின் அடுத்த கட்ட பரிணாமமே இந்த மன்றம் என்று திருமதி நஸ்ஹத் ஃபாஹிமா தெரிவித்தார்.
"இணையம் மூலமாக மறைமுகமாகப் பிறரைப் புண்படுத்தும் போக்கை மாற்றவேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளோம். மக்களை நேரடியாக சந்திக்க வைத்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை உருவாக்க விரும்புகிறோம்," என்றும் நஸ்ஹத் ஃபாஹிமா கூறினார்.
கருத்தரங்குப் பேச்சாளர்களில் ஒருவரான பல சமய புரிதல் நிலையத்தின் தலைவரான திரு இம்ரான் முகம்மது சாகிப், அடையாளம் சார்ந்த அரசியல் தற்போதைய உலகில் பெருகிவரும் சூழலில் மக்களாலேயே வழிநடத்தப்படும் நல்லிணக்க இயக்கங்கள் அமைதிக்கு முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
"முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைமுறையிருக்கு இடையிலான பதற்றநிலை உருவாவது இயல்பு என்று பிரபல சமூகவியல் அறிஞர் கார்ல் மென்ஹைம் தமது எழுத்துகளில் குறிப்பிட்டார். இந்த கால இடைவெளி, தற்போது சமூக ஊடகம் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில் குறையும். அனைத்துலக சமூகத்தின் மாறுதலுக்கு ஏற்றவாறு சமூக அமைப்புகளை நாம் புதுப்பிக்கவேண்டும் அல்லது புதிதாக உருவாக்கவேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்த அமைப்பில் தற்போது 15 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். இதன் முதன்மைத் திட்டங்களில் குறைந்தது 25 பேர் மும்முரமாகப் பங்காற்றி வருவதாகத் திருமதி ஃபாஹிமா தமிழ் முரசிடம் தெரிவித்தார். வேலை செய்யும் இள வயதினரும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் பங்குபெறும் இந்த மன்றத்தில் இன, சமய நல்லிணக்க முயற்சிகளின் மீது ஆர்வம் கொண்டுள்ளோர் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கி. ஜனார்த்தனன்