அதிகம் பரவவல்ல ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி, சிங்கப்பூரில் அடுத்த இரு மாதங்களில் டெல்டா திரிபின் இடத்தைப் பிடித்து, ஆதிக்கம் செலுத்தும் திரிபாக உருவெடுக்கலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தொற்றுநோயியல் வல்லுநர் டேல் ஃபிஷர் தெரிவித்து இருக்கிறார்.
அந்நிலை ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த தொற்று பாதிப்பைக் காட்டிலும் எத்தனை பேர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு ஃபிஷர் கூறினார்.
பலர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும் பட்சத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கான தேவையும் கூடி, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு நெருக்குதலை ஏற்படுத்திவிடலாம்.
"கணிப்புகள் மெய்யானால், இலேசான நோய்த்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்படலாம். ஆனாலும், இப்போதைக்கு அதை உறுதியாகச் சொல்வதற்கில்லை," என்றார் மூத்த ஆலோசகரான பேராசிரியர் ஃபிஷர்.
"நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் பயணங்கள், சமூக, பொருளியல் நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் ஒரு சமநிலையைப் பேணுவதைச் சிங்கப்பூர் தொடர வேண்டியுள்ளது," என்று அவர் சொன்னார்.
உலகில் மற்ற கொவிட்-19 திரிபுகளை எல்லாம் ஓமிக்ரான் பின்னுக்குத் தள்ளிவரும் நிலையில், அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூரில் தொற்று பாதிப்பு உயரக்கூடும் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கழகத்தின் தொற்றுநோயியல் வல்லுநரும் இணைப் பேராசிரியருமான சு லி யாங் கூறினார்.
வரும் மாதங்களிலும் ஓமிக்ரான் கவலையளிக்கக்கூடிய கிருமியாக நீடிக்கும் என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கழக இணைப் பேராசிரியர் ஆஷ்லி செயின்ட் ஜான் கூறினார்.