சிங்கப்பூரில் கொவிட்-19 காலத்தில் மணமான மாதர்கள் உடலுறவில் அதிகம் ஈடுபட்டனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதன் காரணமாக குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்க வழி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்து உள்ளது.
அந்த ஆய்வு, மணமான 409 மாதர்களை உள்ளடக்கி நடத்தப்பட்டது. அவர்களுக்குச் சராசரி வயது 2020ல் 32.
அவர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூரரை திருமணம் செய்தவர்கள். அவர்கள் சராசரியாக ஆறாண்டுகளுக்கு முன் திரு மணம் செய்துகொண்டவர்கள்.
லீ குவான் இயூ பொதுக்கொள்கை பள்ளி அந்த ஆய்வுக்கு நிதியுதவி வழங்கியது. ‘நெக்சஸ் லிங்க்’ என்ற நிறுவனம் தகவல்களைத் தொகுத்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தப் பள்ளியின் இணைப் பேராசிரியரான டாக்டர் டான் போ லின் ஆய்வுக்குத் தலைமை தாங்கினார்.
டாக்டர் டானின் ஆய்வு உதவியாளரான ஸ்கூட் சுவா லீ, இந்த ஆய்வில் டாக்டர் டானுக்கு உதவினார். ஆய்வு முடிவுகள் ‘செக்ஷுவல் மெடிசன் ஜெர்னல்’ என்ற சஞ்சிகையில் சென்ற மாதம் வெளியிடப்பட்டது.
திருமணமான தம்பதியர் தாம் பத்திய உறவில் ஈடுபடும் போக்கில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக முதன்முதலாக நடத்தப்பட்ட சிங்கப்பூர் ஆய்வு இதுதான்.
காலவோட்டத்தில் தம்பதியரின் தாம்பத்திய உறவு போக்கு எப்படி பரிணமித்துள்ளது என்பது பற்றிய கண்ணோட்டத்தை இந்த ஆய்வு தருகிறது.
ஆய்வு 2018 முதல் நடத்தப்பட்டது. 2020ல் பொருளியல் முடக்கம் நடப்பில் இருந்தபோது மணமான மாதர்கள் தாம்பத்திய உறவில் அதிகம் ஈடுபட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. முடக்கம் முடிந்த பிறகும் இந்தப் போக்கு தொடர்ந்ததாக டாக்டர் டான் தெரிவிக்கிறார்.
குறைவான உடலுறவுக்கும் கர்ப்பமாவதற்குமான கால அளவிற்கும் இடையில் தெள்ளத்தெளிவான தொடர்பு இருக்கிறது என்பதை டாக்டர் டான் சுட்டினார்.
சிங்கப்பூரின் கருவள விகிதம் வரலாற்றில் இல்லாதபடி 2020ல் சிங்கப்பூர்வாசியான பெண் ஒருவருக்கு 1.1 குழந்தைப் பிறப்பு என்ற அளவுக்குக் குறைந்தது.
ஆய்வில் கலந்துகொண்ட பெண்களிடம் முதன்முதலாக 2018ல் விவரங்கள் திரட்டப்பட்டன.
16 வார காலத்தில் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட தேதிகள், மனஉளைச்சலின் சராசரி அளவு போன்ற விவரங்கள் திரட்டப்பட்டன. அவர்களிடம் 2020ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் அதே போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
மணமான தம்பதியர் 2020ல் ஒரு வாரத்தில் சராசரியாக 0.78 முறை உடலுறவில் ஈடுபட்டனர். இது 2018ல் ஒரு வாரத்தில் 0.68 முறையாக இருந்தது. இந்த அதிகரிப்பு புள்ளிவிவர ரீதியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்று டாக்டர் டான் விளக்கினார். வாரம் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தாம்பத்திய உறவில் ஈடுபடாத தம்பதியரின் விகிதாசாரம் 2018ல் 54% ஆக இருந்தது. இது 2020ல் 50% ஆகக் குறைந்துவிட்டது.
தாம்பத்திய உறவில் ஈடுபட்ட நாட்களும் ஒரு வாரத்தில் பரந்த அளவில் இருந்தது. கிருமித்தொற்றுக்கு முன்னதாக வெள்ளிக்கிழமைகள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தாம்பத்திய உறவில் தம்பதியர் அதிகம் ஈடுபட்ட போக்கு காணப்பட்டது. திங்கள்கிழமைகளில் இது குறைவாக இருந்தது.
மனஉளைச்சல், களைப்பு, திருமண வாழ்க்கை மனநிறைவு போன்றவை தாம்பத்திய உறவில் தொடர்ந்து முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
பொருளியல் முடக்கத்தின்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை நடப்புக்கு வந்தது. இருந்தாலும் இது மணமான தம்பதியர் இடையில் அதிக உடலுறவுக்கான முக்கிய காரணமாக தெரியவில்லை என்று டாக்டர் டான் கூறுகிறார்.
அதிக நீக்குப்போக்குடன்கூடிய வேலை ஏற்பாடுகள், பயண நேரம் குறைந்தது ஆகியவை தம்பதியர் தாம்பத்திய உறவில் அதிகம் ஈடுபட காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் கருவளம் மிகமிக குறைவாக இருப்பது பற்றியும் டாக்டர் டான் ஆராய்ந்து வருகிறார். தனது ஆய்வின் முடிவுகள் கருவள விகிதத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி இன்னமும் இவர் ஆராய்ந்து வருகிறார்.
இருந்தாலும் வருங்காலத்தில் குழந்தைப் பிறப்பு கூடுவதற்கான சாத்தியம் அவ்வளவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
தொற்று காரணமாக பொருளியல் நெருக்கடிகள் ஏற்பட்டு இருப்பதும் எதிர்காலம் பற்றி நிச்சயமில்லாத நிலவரங்கள் நிலவுவதுமே இதற்கான காரணங்கள். இத்தகைய சூழலில் உலகம் முழுவதுமே பல தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள அவ்வளவாக நாட்டம் காட்டுவதில்லை என்றார் அவர்.