சிங்கப்பூரில் கொவிட்-19 பரவல் தொடங்கியதில் இருந்து, சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவாளர்கள், தொற்றுப் பரிசோதனையாளர்கள், வீட்டில் குணமடைதல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பெரும்பங்காற்றி வருகின்றனர்.
அந்த 'அறியப்படாத நாயகர்களுக்கு', சிங்கப்பூரின் கொவிட்-19 போராட்டம் குறித்து விளக்கும் 'இன் திஸ் டுகெதர்: சிங்கப்பூர்'ஸ் கொவிட்-19 ஸ்டோரி' நூலுக்குத் தாம் எழுதியுள்ள அணிந்துரையில் பிரதமர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர்களுள் திரு ஜெயக்குமார் மாணிக்கமும் ஒருவர்.
இன்னும் மூன்று மணி நேரத்தில் இந்தியா செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்று திரு ஜெயக்குமாரிடம் சொல்லப்பட்டது. அதன்படி பெங்களூர் சென்று, ஒன்பது நாள்களை அங்கு கழித்தார் இவர்.
மறுநாளே மீண்டும் இந்தியா செல்லுமாறு இவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அதற்குமுன், 'எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்' நிறுவன மேலாளராக இவர் 27 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. ஆனாலும், தம்மைக் கேட்டுக்கொண்டதும் உடனடியாக இந்தியா செல்ல இவர் தயாரானார்.
"என் நாட்டிற்காக இதைச் செய்வேன்," என்று அப்போது தாம் சொன்னதாக அந்நூலுக்கு அளித்த நேர்காணலின்போது திரு ஜெயக்குமார் நினைவுகூர்ந்தார்.
கடந்த 2020 ஜனவரி 20ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பைனியர் சாலையில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்த இவர், முகக்கவசங்களை ஆய்வுசெய்வதற்காக விடிகாலை 3 மணிக்கு பெங்களூரு நகரில் இருக்கும் ஒரு தொழிற்சாலையைச் சென்றடைந்தார்.