கழிவுப்பொருள் நிர்வாக ஊழியர்
களாகப் பணிபுரியும் மொத்தம் 3,000 பேருக்குப் புதிய படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் வருடாந்திர சம்பள உயர்வு கிடைக்கும். அத்துடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு வாழ்க்கைத் தொழில், திறன் மேம்பாட்டுப் பாதை வகுத்துத் தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நடப்புக்கு வரும் என்று கழிவுப்பொருள் நிர்வாகத்துக்கான முத்தரப்புக் குழுமம் நேற்று கூறியது.
இந்த முத்தரப்புக் குழுமத்தில் தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் முதலாளிகளும் மற்ற பங்குதாரர்களும் இடம்பெறுகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து 2029ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை சம்பள உயர்வுகள் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் கழிவுப்பொருள் நிர்வாக ஊழியர்களின் சம்பளம் ஆறு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு வரை உயரும். அவர்களது பணியைப் பொறுத்து சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும்.
இத்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மிகைவேலை சம்பளம் தரப்படும்.
2024ஆம் ஆண்டு முதல் அவர்
களுக்குக் குறைந்தது ஒரு மாத சம்பளத்துக்கு ஈடான வருடாந்திர போனஸ் வழங்கப்படும்.
இந்த போனசைப் பெற அவர்கள் அந்த நிறுவனத்தில் குறைந்தது ஓர் ஆண்டுக்கு வேலை செய்திருக்க வேண்டும். ஊழியர்களின் செயல்பாட்டைப் பொறுத்து வழங்கப்படும் போனசாக இது இருக்காது. இந்தப் பரிந்துரைகளை மனிதவள அமைச்சு நேற்று ஏற்றுக்கொண்டது.
"எதிர்வரும் ஆண்டுகளில் கழிவுப்பொருள் நிர்வாகத் துறை ஊழியர்களின் சம்பளம் ஏறத்தாழ 50 விழுக்காடு ஏற்றம் காணும். தொழிற்சங்கவாதிகளும் முதலாளிகளும் சேர்ந்து நல்ல முடிவு எடுத்துள்ளனர்.
"அதே நேரத்தில் கழிவுப்
பொருள் நிர்வாகத் துறை அர்த்தமுள்ள, நீடித்த நிலைத்தன்மை கொண்ட துறையாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
புதிய படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் தங்கள் சம்பளம் உயர்த்தப்படுவதை கழிவுப்பொருள் நிர்வாக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால் அத்துறையைச் சேர்ந்த முதலாளிகள் இத்திட்டத்தால் தங்கள் செலவுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செலவு ஏற்பட்டாலும் அதன் விளைவாக ஊழியர்களின் தரம் அதிகரிக்கும் என முதலாளிகள் கூறினர்.
திறன்மிக்க ஊழியர்களால் சேவைத் தரம் உயரும் என்றும் தொழில்நுட்ப அறிமுகத்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.