பிந்தானில் இருந்து
இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
பல ஆண்டுகளாக சிங்கப்பூர் - இந்தோனீசியாவிற்கு இடையிலான உறவுகளைப் பற்றிய கலந்துரையாடல்களில் முக்கிய அங்கம் வகித்துவந்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உடன்பாடு கண்டதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் பிரதமர் லீ சியன் லூங்.
நேற்று பிந்தான் தீவில் நடந்த இருநாட்டுத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் கையெழுத்தான மூன்று உடன்பாடுகளும் இரு தரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த தனித்தனி அம்சங்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.
தப்பியோடியவர்களை ஒப்படைப்பதற்கான உடன்பாடும் தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடும் கடந்த 2007ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டன என்றாலும் அதன்பின்னர் அவற்றை ஏற்றுச் செயல்படுத்த முடியவில்லை என்று ஓய்வுத்தளச் சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் லீ தெரிவித்தார்.
"ஆனால் இன்று, தப்பியோடியவர்களை ஒப்படைக்கும் உடன்பாட்டில் சிறிய மாற்றத்துடன் அந்த உடன்பாடுகளைச் செயல்படுத்த உறுதியேற்றுள்ளோம்," என்றார் அவர்.
இனி அவற்றை ஏற்றுச் செயல்படுத்த ஆவன செய்வோம் என்ற திரு லீ, அவை பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வைத் தரும் என்று கூறினார்.
சரிவரத் தீர்க்கப்படாவிட்டால் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவிற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு மிகுந்த சிரமங்களை அவை உண்டாக்கும் என்றார் அவர்.
"ஆனால், அவற்றை ஒழுங்காகத் தீர்த்து, ஒரு தெளிவான புரிந்துணர்வு கொண்டால் நாம் மேலும் பல வழிகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல முடியும்," என்று பிரதமர் சொன்னார்.
நேற்று கையெழுத்தான தப்பியோடியவர்களை ஒப்படைக்கும் உடன்பாடு, சில பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருநாட்டு சட்டங்களின்படி ஒப்படைக்கக் கூடிய சட்டவிரோதச் செயல்களின் பரந்த பட்டியலைக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே சிங்கப்பூர் இதுபோன்ற உடன்பாட்டை பிரிட்டன் போன்ற இதர நாடுகளுடன் கொண்டுள்ளது. மலேசியா, புருணையுடன் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு தப்பியோடியவர்கள்மீது கைதாணை பிறப்பிக்கும் முறையும் செயல்பாட்டில் உள்ளது.
குற்றச் செயல்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முதலீட்டாளர்களுக்குத் தெளிவான சமிக்ஞையை வழங்கும் விதமாகவும் இந்த உடன்பாடு வழிசெய்யும் என்று திரு லீ சுட்டினார்.
இரு தலைவர்களின் முன்னிலையில் 2007ஆம் ஆண்டின் தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடும் இந்தோனீசிய ராணுவப் பயிற்சித் தளத்தைப் பயன்படுத்த சிங்கப்பூர் - இந்தோனீசிய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தும் கூட்டறிக்கையும் கையெழுத்தாகின.
"தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு இரு ஆயுதப் படைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு தற்காப்பு உறவை முன்னேற்றும்," என்று திரு லீ கருத்துரைத்தார்.
இரு ஆயுதப் படைகளுக்கும் இடையில் நெருக்கமான கலந்துறவாடலை ஊக்குவிக்கும் இந்த உடன்பாடு 25 ஆண்டுகளுக்குச் செயல்பாட்டில் இருக்கும்.
இந்த உடன்பாட்டின்படி, இந்தோனீசியாவின் ராணுவப் பயிற்சித் தளங்களில் சிங்கப்பூர் ஆயுதப் படை தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும். அதே வேளையில், இந்தோனீசிய எல்லைகள், அதன் தீவுகளின் எல்லைகள், நீரிணைகள், ஆகாயவெளி போன்றவற்றை மதித்துச் செயல்படும்.
நீடித்த நிலைத்தன்மை, பசுமைப் பொருளியல், மின்னிலக்கப் பொருளியல், மனித மூலதன மேம்பாடு போன்ற புதிய அம்சங்களில் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் ஒத்துழைக்கும் வழிகள் ஆராயப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
ஓய்வுத்தளச் சந்திப்புக்கு முன்னர் கையெழுத்தான ஆறு புரிந்துணர்வுக் குறிப்புகளை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
சிங்கப்பூர் $12.4 பி. முதலீடு
இதனிடையே, இந்தோனீசியாவில் பசுமை முதலீட்டை ஆதரிக்கவும் தளவாட நடுவம் ஒன்றை அமைக்கவும் சிங்கப்பூர் 9.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$12.4 பி.) முதலீடு செய்யும் என்று அதிபர் ஜோக்கோவி தெரிவித்துள்ளார்.
பாத்தாம், சும்பா தீவு, கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தின் மேற்கு மங்காராய் ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கும் ஜகார்த்தாவின் தஞ்சுங் பிரியோக் துறைமுகத்தில் தளவாட நடுவத்தை அமைப்பதற்கும் சிங்கப்பூர் நிதியாதரவு அளிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தோனீசியாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் சிங்கப்பூர்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். 2021 ஜனவரி-செப்டம்பர் காலகட்டத்தில் சிங்கப்பூர் 7.3 பில்லியன் அமெரிக்க டாலரை அங்கு முதலீடு செய்தது.
'சிங்கப்பூர் கௌரவிப்பு'
இவ்வாண்டு இந்தோனீசியாவில் நடக்கும் 'ஜி20' மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்கப்பூர் கௌரவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
அம்மாநாட்டில் நடக்கும் கலந்துரையாடல்களில் பங்கேற்க தன்னால் ஆன சிறந்த முயற்சிகளைச் சிங்கப்பூர் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பிந்தானில் நேற்று நடந்த சிங்கப்பூர் - இந்தோனீசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அதிபர் ஜோக்கோவி சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்தார்.
வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பாலித் தீவில் ஜி20 மாநாட்டை இந்தோனீசியா தலைமையேற்று நடத்தும்.
'ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்' என்பது அம்மாநாட்டின் கருப்பொருள். நாடுகளை ஒன்றுதிரட்டி, இணைந்து பணியாற்றுவதன்மூலம் கொவிட்-19 கிருமிப் பரவலில் இருந்து வலுவாகவும் நீடித்து நிலைக்கத்தக்க விதத்திலும் மீண்டெழ முடியும் என்று இந்தோனீசியா நம்புகிறது.