மக்கள் செயல்கட்சியின் சமூக அறநிறுவனப் பிரிவு முதியோர் உதவித் திட்டங்களுக்கு ஆதரவளிக்க 'லயன்ஸ் பிஃபிரென்டர்ஸ்' அமைப்புக்கு கிட்டத்தட்ட $400,000 நன்கொடை வழங்கியுள்ளது.
இந்நிதி அந்த அமைப்பின் பராமரிப்புத் திட்டங்கள், சேவைகளின் கீழ் உள்ள 7,800 மூத்தோருக்கு ஆதரவளிக்கப் பயன்படும்.
குடும்ப ஆதரவு அறவே இல்லாத அல்லது மிகச் சிறிய அளவிலான ஆதரவைப் பெறும் வாடகை வீட்டில் தனியாக வசிக்கும், சமூகத்தில் தனிமைப்பட்டுப் போகும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய முதியோருக்கு அன்பளிப்பு வழங்க இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
அன்பளிப்புப் பையில் குளிக்கும் சோப்பு, கைகழுவும் சோப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு, வலி நிவாரண மருந்துகளுடன் முதியவர்களின் தேவையைப் பொறுத்து, மடக்கும் நாற்காலி அல்லது மடிக்கக்கூடிய தள்ளுவண்டியும் வழங்கப்படும்.
லயன்ஸ் பிஃப்ரென்டர்ஸ் அமைப்புக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா நேற்று கலந்துகொண்டார்.
பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்களைக் கைதூக்கிவிட இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதாக மசெக அறநிறுவனம் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான குமாரி இந்திராணி கூறினார்.
"பாலினம், இனம், சமய பேதங்கள் இன்றி, நமது வீட்டில், நமக்கு மத்தியில், நமது எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களைக் கைதூக்கி விடுவது அற நிறுவனத்தின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்றாகும்," என்றார் அவர்.
முதியோருக்கு இந்த அன்புப் பைகள் மகிழ்ச்சி அளிக்கும் என நம்புவதாக அமைச்சர் கூறினார்.நேற்றைய நிகழ்வில் அன்பளிப்புப் பை விநியோகம் தொடங்கியது. அறுவர் தள்ளுவண்டி, மடக்கும் நாற்காலி இரண்டையும் பெற்றனர்.
அன்பளிப்புப் பையைப் பெற்றவர்களில் 101 வயது திரு ஹசன் அப்துல் ஹாஜியும் ஒருவர். நடையை விரும்பும் இவர், இந்த மடக்கும் நாற்காலி நடக்கும்போது இடையே ஓய்வெடுக்க உதவும் என்றார்.
அடுத்த ஆறு மாதகாலத்தில் அன்பளிப்புப் பைகள் கட்டங்கட்டமாக விநியோகிக்கப்படும்.
மக்கள் செயல் கட்சி 1986ல் தொடங்கிய இந்த அறநிறுவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.