அண்மையில் தொடங்கப்பட்ட ஹோஸ்பிஸ் பகல்நேரப் பராமரிப்பு சேவை நிலையம், மரணத்தை எப்படி எதிர்கொள்வது எனும் தலைப்பில் கலந்துரையாடல்களை நடத்தியபோது, பலவிதமான கருத்துகள் குவியத் தொடங்கின.
மரணம் தேடி வரும்வரை காத்திருப்பதை விட்டுவிட்டு ஒருவரது ஆதரவுடன் அது வரும் வரை வாழ்வதையே பலரும் விரும்புகிறார்கள் எனத் தெரிய வந்தது.
ஊட்ரம் சமூக மருத்துவமனையில், 'எச்சிஏ' (HCA) வலிகுறைப்பு பராமரிப்பு நிலையம் நடத்தும் ஓயசிஸ்@ஊட்ரம் பிரிவில் அந்திமகால பகல்நேரப் பராமரிப்பில் உள்ள நோயாளிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு அறையில் மாஜோங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது, குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் பானம் அருந்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
முன்பு இருந்ததுபோல், ஒரு குறிப்பிட்ட அட்டவணையைப் பின்பற்றி தங்கள் அந்திம காலத்தைக் கழிக்கும் முறையிலிருந்து மாறுபட்டு, தங்கள் அந்திமகாலத்தை எப்படி கழிப்பது என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கருத்துரைத்த அந்திமகாலப் பராமரிப்பு மருத்துவர்களும் ஊழியர் களும் அங்கு பராமரிப்பு மேம்பட்டு வருவதாகக் கூறினர்.
மேலும், மரணம், மரணத்தை நெருங்குதல் போன்ற மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடியவற்றைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து, அந்திமகாலப் பராமரிப்பு பற்றி சமூக அளவில் விழிப்புணர்வை அதிகரிப்பது, அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போன்ற அம்சங்களைப் பிரபலப்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர்.
கடந்த டிசம்பரில் நடந்த ஒரு கருத்தரங்கில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், அந்திமகால பராமரிப்புத் துறைக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றார்.
அந்திமகாலப் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு, வலிகுறைப்புப் பராமரிப்பு மற்றும் இல்ல அந்திமகாலப் பராமரிப்பின் திறன், இத்துறையில் உள்ள நிபுணர்களின் ஆற்றலை அதிகப்படுத்துதல் போன்றவை அரசாங்கத்தின் ஆதரவில் அடங்கும்.
16 படுக்கைகளுடன் முதலாவது அந்திமகால இல்லம் 1985ல் செயின்ட் ஜோசஃப்ஸ் கன்னிமார்களால் தொடங்கப்பட்டது.
அன்றிலிருந்து இது, சமூக திட்டங்களின் உதவியுடன் படிப்படியாக வளர்ச்சியடைந்து அந்திமகாலப் பராமரிப்பு வழங்கும் நிபுணர்கள் கொண்ட கட்டமைப்பாக உருவெடுத்தது என்றார் சிங்கப்பூர் அந்திமகால மன்றத்தின் தலைவர் டாக்டர் பெட்ரிஷியா நியோ.
'டோவர் பார்க் ஹோஸ்பிஸ்', 'அசிசி ஹோம் அண்ட் ஹாஸ்பைஸ்' போன்ற நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட அந்திமகால இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் மருத்துவமனை வலி குறைப்பு சிகிச்சை சேவைகள் தொடர்ந்து வந்தன. வலிகுறைப்பு மருத்துவம் மருத்துவ மாணவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பாடமாக மாறியது.
வலிகுறைப்பு சிகிச்சையானது புற்றுநோயாளிகளிடம் கவனம் செலுத்தும் அதே வேளையில், இப்போது இறுதி நிலை நுரையீரல் நோய், இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கடுமையான மூத்தோர் மறதிநோய் உள்ளவர்களுக்கும் உதவுகிறது.
ஆனாலும் இதில் சவால்கள் இருக்கின்றன. இறப்பைப் பற்றி விவாதிக்க தயக்கம் காட்டுவது அதில் ஒன்று.
மற்றொன்று, அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்கள் மரணத்தைச் சந்திக்க எப்படி உதவலாம் என்பது.
2014ஆம் ஆண்டு லியன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 77 விழுக்காட்டினர் தங்கள் வீட்டிலேயே இறக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் 2020ல் 25 விழுக்காட்டு இறப்புகள் மட்டுமே வீட்டில் நிகழ்ந்தன.
குறைந்து வரும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள், சிறிய குடும்பங்கள், வயதான மக்கள்தொகை, அதிகரித்து வரும் நாள்பட்ட நோய்ச் சுமை ஆகியவற்றுடன் இணைந்து, எதிர்கால வலிகுறைப்புப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மறு உத்திகள், திட்டமிடல் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது என்றார் டாக்டர் நியோ.