முழுமைத் தற்காப்பு நடவடிக்கை மூலம் கொள்ளைநோய்க்கு எதிராக நாட்டைத் தற்காப்பதில் சிங்கப்பூரர்கள் தங்களது பங்கைச் சரிவர ஆற்றி இருப்பதாகவும் அதன் காரணமாக உலக அளவில் ஆகக் குறைவான கொவிட்-19 மரணங்கள் நிகழும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்வதாகவும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹெங் தெரிவித்து உள்ளார்.
முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி அவர் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில், "நாட்டின் பொருளியல் பெரிய தொய்வின்றி அப்படியே தொடருகிறது.
சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு தளர்ந்துவிடவில்லை. மக்கள் ஒன்றுபட்டு உள்ளனர்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
சிங்கப்பூர் இன்று (பிப்ரவரி 15) தனது முழுமைத் தற்காப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. 1984ஆம் ஆண்டு இது அறிமுகம் கண்டது.
சுமார் 40 ஆண்டு காலம் இங்கு ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் படை 1942ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படையிடம் முறைப்படி சரணடைந்த தினம் இது.
முழுமைத் தற்காப்பின் பின்னணியை விளக்கி தமது பதிவில் குறிப்பிட்ட டாக்டர் இங், "சிங்கப்பூர் வரலாற்றின் இருண்ட அத்தியாயம்" 80 ஆண்டுகளைத் தொடுவதாகக் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு சிங்கப்பூர் தேசிய சேவையின் 55 ஆண்டு நிறைவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ராணுவத் தற்காப்பு நாட்டின் தூண் என்று குறிப்பிட்ட அமைச்சர், முழுமைத் தற்காப்பு என்பது ஒவ்வொரு சிங்கப்பூரரின் முயற்சி யையும் உள்ளடக்கியது என்றார்.
கொவிட்-19 கொள்ளைநோய் அச்சுறுத்தலைச் சமாளிப்பதில் முழுமைத் தற்காப்பு கடைப்பிடிக்கப்பட்டது நாட்டின் நிலைத்தன்மைக்குப் பெரிதும் உதவியதாகவும் டாக்டர் இங் தமது பதிவில் தெரிவித்து உள்ளார்.