ஜப்பானியர்களுக்கு எதிரான போரின்போது (8-15 பிப்ரவரி 1942) சிங்கப்பூரின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்த சிலோசோ கோட்டை, இன்று அரசிதழில் தேசிய நினைவுச்சின்னமாக அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சிலோசோ கோட்டை சிங்கப்பூர் நிலப்பரப்பில் இல்லாத முதல் நினைவுச்சின்னமாகும்.
ஓர் இடத்தைச் சேர்ந்த 11 கட்டமைப்புகள் அரசிதழில் தேசிய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் சரணடைந்த 80ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்த 11 கட்டமைப்புகள் தேசிய நினைவுச்சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்று தேசிய மரபுடைமைக் கழகம் தெரிவித்தது.
"நமது தேசத்தைப் பாதுகாப்பதில் குடிமக்களாக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஃபோர்ட் சிலோசோ அடையாளமாகத் திகழ்கிறது," என்றார் தேசிய மரபுடைமைக் கழகத்தின் தளங்கள், நினைவுச்சின்னங்களின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் திருவாட்டி ஜீன் வீ. இந்த 11 சின்னங்களும் சிலோசோ கோட்டையின் பாதுகாப்புச் செயல்பாட்டில் வகித்த முக்கிய பங்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் திருவாட்டி ஜீன் வீ தெரிவித்தார்.
நான்கு துப்பாக்கித் தளங்கள், துப்பாக்கிகளுக்குக் கீழே நிலத்தடி தோட்டாக்களாக செயல்பட்ட மூன்று சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளிட்டவை இந்த 11 சின்னங்களில் அடங்கும்.
'புலாவ் பிலாக்காங் மத்தி'யின் (இன்றைய செந்தோசா) கடலோரப் பகுதியில் உள்ள கெப்பல் துறைமுகத்தைப் பாதுகாக்க 1878ஆம் ஆண்டு இவ்விடம் கட்டப்பட்டது. சிலோசோ கோட்டை செந்தோசாவின் மேற்கு முனையில் அமைந்துள்ளது.
சிலோசோ கோட்டையின் இரண்டாம் உலகப் போரைப் பிரதிபலிக்கும் விலையுயர்ந்த துப்பாக்கிகள், வலுவான ராணுவக் கட்டமைப்புகள், சுரங்கப்பாதைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் வீரர்களுக்கும், பிற்காலத்தில் சரணடைந்த ஜப்பானிய வீரர்களுக்கும் போர்க் கைதிகளின் முகாமாக சிலோசோ கோட்டை செயல்பட்டது. இவை போரின்போது சிங்கப்பூர் தன்னைக் காத்துக்கொண்ட கதையைச் சித்திரிக்கின்றன.
சிலோசோ வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோரத் துப்பாக்கிகளை சிங்கப்பூரர்கள் மீண்டும் பார்வையிட அழைப்பதாக செந்தோசா வளர்ச்சிக் கழகத்தின் உதவி தலைமை நிர்வாகி திரு மைக்கேல் மாஹ் கூறினார்.
சிலோசோ கோட்டைக்குச் செல்ல கட்டணம் இல்லை.
கவின்மொழி கதிரொளி