பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2023, 2024 இரண்டு கட்டங் களாக 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த அதிகரிப்பின் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. $6.6 பில்லியன் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு கூடுதல் ஜிஎஸ்டி வரிச் செலவை ஈடுசெய்யும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்றுத் தெரிவித்தார்.
கடந்த 2020 வரவுசெலவுத் திட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் $6 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று இத்திட்டத்துக்கு $640 மில்லியன் ஒதுக்கியுள்ளார்.
அத்துடன், மேம்படுத்தப்பட்ட நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தில் இருந்து வழங்குதொகை 2026ல் முடிவடைந்த பின்னரும், குறைந்த வருமானக் குடும்பங்க ளுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் ஆதரவளிக்கும்.
இத்திட்டத்தின்கீழ் ஜிஎஸ்டி ரொக்கப் பற்றுச்சீட்டு வழங்குதொகை $250க்கும் $500க்கும் இடைப்பட்ட தொகையாக உயரும். ஒருவரது வீட்டு மதிப்பைப் பொறுத்து தொகை நிர்ணயிக்கப்படும். தற்போது இந்த வழங்குதொகை $150க்கும் $300க்கும் இடைப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வருமான வரம்பும் $28,000லிருந்து $34,000ஆக உயர்த்தப்படும். இதன்மூலம், கூடுதலான சிங்கப்பூரர்கள் இத்திட்டத்திற்குத் தகுதிபெற முடியும். 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஏறக்குறைய 1.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் இந்த வழங்குதொகையைப் பெறுவர்.
மேலும், குழந்தைகளின் கல்விக்காக தொகை நிரப்புதல், குடியிருப்பு வட்டாரக் கடைகளில் பயன்படுத்துவதற்கான பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றின் மூலம் குடும்பங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவி கிட்டும்.
அனைத்து வயது வந்த சிங்கப்பூரர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் S$1,600 வரை ரொக்கத்தை எதிர்பார்க்கலாம்.
குறைந்த வருமானம் பெறும் முதியவர்களும் S$900 வரையிலான கூடுதல் வழங்கீடுகளுக்குத் தகுதி பெறுவர்.
21 வயதும் அதற்கு மேல் உள்ள அனைத்து சிங்கப்பூரர்களும் S$1,600 வரை ரொக்கப் பணம் பெறுவார்கள், இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படும்.
ரொக்கம், பற்றுச்சீட்டுகள் தவிர, மேம்படுத்தப்பட்ட உத்தர வாதத் தொகுப்புத் திட்டம் குடி மக்கள் ஆலோசனைக் குழுக்களுக் கும் சுய உதவி குழுக்களுக்கும் அதிக நிதியுதவியை வழங்கும்.
"உத்தரவாதத் தொகுப்புத் திட் டம் பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதல் ஜிஎஸ்டி செலவினங்களை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்ட உதவும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதிக உதவி கிடைக்கும். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி செலவினங்களை ஈடுகட் டும் உதவியைப் பெறுவார்கள்," என்று அமைச்சர் வோங் கூறினார்.
எல்லா சிங்கப்பூர் குடும்பங்களும் $200 சிடிசி (சமூக மேம்பாட்டு மன்ற) பற்றுச்சீட்டுகளைப் பெறும்.
இதனை, திட்டத்தில் பங்குபெற்றுள்ள கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் இவ்வாண்டு இந்தப் பற்றுச்சீட்டை அந்தக் குடும்பம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவற்றை அறிவித்த திரு வோங், ஒட்டுமொத்த பொருளியல் நிலவரம் சாதகமாக இருப்பினும் சில துறைகளின் பொருளியல் இன்னும் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார்.
"குடும்பங்கள், வர்த்தகங்கள் ஆகியவற்றில் எழுந்துள்ள கவலைகளை ஏற்கிறேன். தற்போதைய விலையேற்ற காலத்தில் அவர்களுக்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தின்மூலம் கணிசமான அளவுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்," என்றார் அவர்.
இந்த உதவித் தொகுப்பின் மூலம், தகுதியுள்ள வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டும் இவ்வாண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட இருக்கும் பயனீட்டுக் கட்டணக் கழிவும் இரட்டிப்பாகும்.
உதாரணத்திற்கு, மூவறை வீட்டில் வசிக்கும் குடும்பம் இந்த மூன்று மாதங்களில் கூடுதலாக $85 கட்டணக் கழிவைப் பெறும்.
பொருள், சேவை வரி அதி கரிப்பை ஈடுசெய்யும் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் $85 கட்டணக் கழிவுக்குக் கூடுதலாக அக்குடும்பம் இதனைப் பெறும். கூடுதல் ஆதரவு மூலம், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, பயனீட்டுக் கட்டணக் கழிவு ஆகியவை மூலம் இதற்கு முன்னர் $425ஆக இருந்த உதவித் தொகை 2022 நிதி ஆண்டில் $680க்கு உயரும்.
கிட்டத்தட்ட 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் கூடுதல் கட்டணக் கழிவைப் பெறும்.
21 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் தங்களது குழந்தை மேம்பாட்டுக் கணக்கு, எடுசேவ் கணக்கு அல்லது உயர்நிலைக்குப் பிந்திய கல்விக் கணக்கு ஆகியவற்றில் தலா $200 நிரப்புதொகை பெறுவர். ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் வருடாந்திர எடுசேவ் நிரப்புதொகையுடன் கூடுதலாக இது வழங்கப்படுகிறது.
1. அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ரொக்கம்
அனைத்து வயது வந்த சிங்கப்பூரர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிசம்பர் 2022 முதல் 2026 வரை ரொக்கப் பணம் பெறுவார்கள். வருமானம், சொத்து உடைமையைப் பொறுத்து அவர்கள் பெறும் மொத்தத் தொகை S$700 முதல் S$1,600 வரை இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு $34,000 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தை ஈட்டுபவர்கள், ஒரு சொத்து அல்லது சொத்தே இல்லாதவர்கள், ஆண்டுக்கு $200 முதல் $400 வரை யிலும் மொத்தமாக $1,600 வரையிலும் பெறத் தகுதி உடையவர்கள். ஆண்டுக்கு $100,000க்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஆண்டுக்கு S$100 முதல் $200 வரை பெறுவார்கள், மொத்தம் $700. ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கும் தனிநபர்களுக்கும் அவர்களின் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் இதேபோன்ற தொகை வழங்கப்படும்.
கிட்டத்தட்ட 2.8 மில்லியன் வயது வந்த சிங்கப்பூரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு முதியோர் போனஸ்
வரும் 2023 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டுகளில் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, ரொக்கம் (மூத்தோர் போனஸ்) திட்டத்தின் மூலம் $600 முதல் $900 வரையிலான கூடுதல் ரொக்க வழங்கீடுகளைப் பெறுவர்.
$34,000, அதற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட ஏறக்குறைய 850,000 முதியவர்கள் போனஸைப் பெறுவர்.
$13,000, அதற்கும் குறைவான ஆண்டு மதிப்புள்ள வீடுகளுக்கு, 2025ஆம் ஆண்டு வரை $250 (55 முதல் 64 வயது வரை உள்ளவர்கள்) அல்லது $300 (65 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள்) பெறுவார்கள்.
$13,000க்கு மேல் $21,000க்குக் குறைவான மதிப்பு உள்ள வீடுகளைக் கொண்ட முதியவர்கள் வயது வேறுபாடின்றி $200 ரொக்கம் பெறுவர்.
3. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு- சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு
சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு, ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் நிரந்தர பகுதியாக அமையும். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணக் கழிவுகள் கிடைக்கும். ஏப்ரலில் தொடங்கி நான்கு கட்டங்களாக இவை வழங்கப்படும் தகுதியுடைய வீவக குடும்பங்கள், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின்கீழ் தற்போது பெறும் தள்ளுபடிகளுக்கு மேல், ஜனவரி 2023 முதல் 2026 வரை அதிகமான சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு (யு-சேவ்) பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள். நான்கு ஆண்டு காலத்தில் ஓரறை, ஈரறை கொண்ட குடும்பங்கள் $570 வரை பெறுவர். எக்ஸிகியூடிவ் வீடுகள் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிப்பவர்களுக்கு $330 வரை கிடைக்கும்.
ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் இந்த உதவியைப் பெறுவார்கள். இதன்மூலம் 1.5க்கும் 3.5 மாதத்திற்கும் இடைப்பட்ட சேவை, பராமரிப்புக் கட்டணங்களை ஈடுசெய்ய முடியும்.
4. மெடிசேவ் கணக்கில் பணம் நிரப்புதல்
இரண்டு மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு 2023 முதல் 2025 வரை தங்கள் மத்திய சேமநிதி மெடிசேவ் கணக்கில் ஆண்டுதோறும் $150 பணம் நிரப்பப்படும். இதற்கு 20 வயதும் அதற்குக் குறை வான சிங்கப்பூரர்களும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் தகுதி பெறுவர்.
5. சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு
அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 2023, 2024ஆம் ஆண்டுகளில் $200 மதிப்புடைய சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இந்தப் பற்றுச்சீட்டுகளை பங்குபெறும் கடைகள், வணிக மையங்கள், பிரதான பலபொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்படலாம்.
6. குடிமக்கள் ஆலோசனைக் குழு, சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி
குடிமக்கள் ஆலோசனைக் குழு காம்கேர் நிதி ஐந்து ஆண்டுகளில் $5 மில்லியன் நிதி பெறும். இந்த நிதியானது அந்தந்த குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களை அணுகும் அவசரத் தேவைகளைக் கொண்ட குடும்பங்களுக்குப் பயனளிக்கும். கூடுதலாக, சீன மேம்பாட்டு உதவிக் குழு, யூரேஷியன் சங்கம், மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) நான்கு சமூக சுய உதவி குழுக்களுக்கு நான்கு ஆண்டுகளில் 12 மில்லியன் நிதி உதவி வழங்கப்படும்.