செப்டம்பர் முதல் முறையே $5,000ஆகவும் $3,000ஆகவும் அதிகரிக்கும்
வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தும் முதலாளிகள், அத்தகைய ஊழியர்களுக்கு விரைவில் குறைந்த பட்சமாக அதிக சம்பளத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
புதிய எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பங்களுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச சம்பளம் இவ்வாண்டு செப்டம்பர் முதல் $5,000ஆக உயரும். இப்போது இந்தச் சம்பளம் $4,500ஆக இருக்கிறது.
நிதிச் சேவைத் துறைகளைப் பொறுத்தவரை இந்தக் குறைந்தபட்ச சம்பள அளவு $5,000லிருந்து $5,500ஆகக் கூடும்.
ஆற்றல் மிகுந்த, பொருத்தமானவர்கள் எம்பிளாய்மண்ட் பாஸ் அனுமதியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அப்போதைக்கு அப்போது அவர் களுக்கான தொடக்க சம்பளம் சரிசெய்யப்படுகிறது.
ஓர் ஊழியரின் ஆற்றலைப் பொறுத்தே அவருக்கு அதிக சம்பளத்தைக் கொடுக்க முதலாளி முன்வருவார் என்பது நடைமுறை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புதிய வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
"எம்பிளாய்மண்ட் பாஸ் அனுமதி பெற்று சிங்கப்பூர் வருபவர்கள் நிபுணத்துவர்களாக, மூத்த நிர்வாகி களாக இருக்கவேண்டும்.
"அவர்கள் நம் பொருளியலுக்கு உதவ முடியும். தங்களுடன் வேலை பார்ப்போரின் தேர்ச்சிகளைக் கூர்தீட்ட முடியும். நம் ஊழியர் அணியைப் பலப்படுத்தவும் அவர்களால் முடியும்," என்றார் அமைச்சர்.
குறைந்தபட்ச சம்பளம் ஒருபுறம் இருக்க, எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிடும் முறையும் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களிடத்தில் முதலீடு செய்யும் அதே வேளையில், நாம் தொடர்ந்து திறந்த நிலையில் இருந்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆற்றல்மிக்கவர்களை ஈர்க்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
எஸ்-பாஸ் அனுமதி மூலம் வரும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமும் உயர்த்தப்படுகிறது.
இந்தச்சம்பளம் இப்போது $2,500ஆக இருக்கிறது. இது இந்த ஆண்டு செப்டம்பர் முதல் $3,000 ஆகும்.
நிதிச் சேவையில் இவர்களுக்கான புதிய சம்பளம் புதிய குறைந்தபட்ச சம்பளம் $3,500 ஆக இருக்கும். எஸ்-பாஸ் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மீண்டும் அடுத்த ஆண்டு செப்டம்பரிலும் 2025 செப்டம்பரிலும் உயர்த்தப்படும். இது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். புதுப்பிக்கப்படும் விண்ணப்பங் களைப் பொறுத்தவரை இந்த மாற்றங்கள் ஓராண்டு தாமதமாக 2023 செப்டம்பரில் இருந்து நடப்புக்கு வரும்.
வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கும் கட்டுமானம், பதனீட்டு தொழில்துறைகளுக்கான 'ஒர்க்பர்மிட்' கொள்கைகள் சரிசெய்யப்படும்.
எடுத்துக்காட்டாக 2024 ஜனவரியில் இருந்து சார்ந்திருப்போர் விகித வரம்பு அல்லது ஒரு நிறுவனம் நியமிக்கக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களின் வரம்பு 87.5%லிருந்து 83.3%ஆகக் குறைக்கப்படும்.
மனிதவள அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பல்வேறு வெளிநாட்டு ஊழியர் கொள்கை மாற்றங்கள் பற்றிய மேல்விவரங்கள் அறிவிக்கப்படும்.