போதைப் பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதன் சந்தேகத்தின் பேரில் முப்பது வயதுகளில் உள்ள மூன்று சிங்கப்பூர் ஆடவர்களை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) கைது செய்துள்ளது.
18 எக்ஸ்டசி மாத்திரைகள், 2 கிராம் 'ஐஸ்', போதைப் பொருள் உட்கொள்வதற்கான சாதனங்கள் ஆகியவை அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதே வீட்டில், குறிப்பிடத்தக்க அளவில் மின் சிகரெட்டுகள், அது தொடர்பான உதிரி பாகங்கள் ஆகியவற்றையும் சிஎன்பி அதிகாரிகள் கண்டுபிடித்து, அது குறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரியப்படுத்தினர்.
அந்த வீட்டில் போதைப் பொருள் தவிர்த்து கைப்பற்றப்பட்ட பொருள் களின் மதிப்பு கிட்டத்தட்ட $700,000 என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
மொத்தம் 1,461 மின் சிகரெட்டுகள், 94,572 மின் சிகரெட் உதிரி பாகங்கள், 78,091 புகையிலைக் குச்சிகள் ஆகியவற்றை சுகாதார அறிவியல் ஆணையம் கைப்பற்றியது.
அந்த மூவர் (வயது 30, 32, 37) மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புகையிலை (விளம்பரக் கட்டுப்பாடு, விற்பனை) சட்டத்தின்படி, செயற்கை புகையிலைப் பொருள்களின் இறக்குமதி, விநியோகம், விற்பனை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றத்தை முதல் முறை புரிந்த ஒருவருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதம் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தைப் புரிபவருக்கு $20,000 வரை அபராதம், 12 மாதம் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை வைத்திருப்போர், விற்பவர் அல்லது பயன்படுத்துபவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
தடை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.