சிங்கப்பூர் அதன் பள்ளிகளைப் பல்வகைப்படுத்தி பலதரப்பட்ட மாணவர்களுக்குப் பல்வேறு பாதைகளை வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு பலம், ஆர்வம், இலட்சியம், கற்றல் தேவைகள் ஆகியவை இருப்பதை அமைச்சர் சான் சுட்டினார்.
இதுதான் வெற்றிக்கான பாதை என்று அனைவருக்கும் ஒரே வழியைக் காட்டக்கூடாது என்றார் அவர்.
நான் சியாவ் தொடக்கப்பள்ளி, நான் சியாவ் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றின் 75வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு திரு சான் பேசினார்.
இந்த விழா செங்காங் வட்டாரத்தில் உள்ள நான் சியாவ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிங்கப்பூருக்குப் போதிய வளங்கள் இல்லாததால், இருக்கும் வளங்களை முழுமையாகவும் துரிதமாகவும் பயன்படுத்த நாட்டின் கல்வி முறை வடிவமைக்கப்பட்டதாக திரு சான் தெரிவித்தார்.
ஆனால் பலதரப்பட்ட மாணவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வகை அணுகுமுறைகளைப் பயன்படுத்தாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பல பள்ளிகள் கடைப்பிடித்ததாக அவர் கூறினார்.
"தற்போது நமக்குக் கூடுதல் வளங்கள் இருக்கின்றன. மாணவர்கள் தேர்ந்தெடுக்க பல்வகை தெரிவுகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு தெரிவும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும். அவற்றின் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை அடையாளம் காண முடியும்," என்று திரு சான் தெரிவித்தார்.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, நார்த்லைட் பள்ளி, சிங்கப்பூர் கலைகள் பள்ளி போன்ற சிறப்புப் பள்ளிகளையும் நான் சியாவ் உயர்நிலைப்பள்ளி போன்ற சிறப்பு உதவித் திட்ட பள்ளிகளையும் அறிமுகப்படுத்த சிங்கப்பூர் செயல்பட்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
1979ஆம் ஆண்டில் முதல் ஒன்பது சிறப்பு உதவித் திட்ட பள்ளிகள் அறிவிக்கப்பட்டபோது அவற்றுக்கான பட்டியலில் நான் சியாவ் உயர்நிலைப்பள்ளி இடம்பெறவில்லை. ஆனால் 2012ஆம் ஆண்டில் அப்பட்டியலில் அது சேர்க்கப்பட்டது.
சிறப்பு உதவித் திட்ட பள்ளிகள் பட்டியலில் இடம்பெறும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு சீனமொழி, சீனக் கலாசாரம் ஆகியவற்றுடன் இருமொழித் திறன் பெற ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது.
ஆண்டு விழாவின்போது மரபுடைமைக் கலைக்கூடம் ஒன்றை அமைச்சர் சான் திறந்துவைத்தார். முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.