கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கு மீண்டும் அந்நோய் ஏற்படலாம் என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்று ஒருமுறை ஏற்பட்டுவிட்டதால் இனி தங்களுக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்படாது என்று மெத்தனமாக இருந்து
விடக்கூடாது என்று அவர்
வலியுறுத்தினார்.
கொவிட்-19 கிருமிக்கு எதிரான எதிர்ப்புசக்தி நாளடைவில் குறையும் என்றும் இதனால் மீண்டும் கிருமித்தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
மீண்டும் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால் அது உடல்நிலையை அவ்வளவாகப் பாதிக்காது எனப் பெரும்பாலான தரவுகள் தெரிவிக்கின்றபோதிலும் ஓமிக்ரான் போன்ற மிக இலேசான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிருமி வகையாலும் மிக மோசமான பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எனவே, கொவிட்-19 கிருமித்தொற்றிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரைப் போலவே கத்தாரிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாக உள்ளபோதிலும் ஆல்ஃபா, பேட்டா, டெல்டா, ஓமிக்ரான் கிருமி வகையால் அங்கு பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பேராசிரியர் லியோ சுட்டினார். ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தோருக்கும் ஆல்ஃபா, பேட்டா, டெல்டா கிருமி வகையால் நோய் ஏற்படும் சாத்தியம் குறைவு என்றும் அவற்றுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் கிருமியால் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் என்றும் கத்தாரில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
ஓமிக்ரானால் எதிர்ப்புசக்தியை மீறி பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதால் அதற்கு எதிரான பாதுகாப்பு குறைவாக இருப்பதாக
பேராசிரியர் லியோ தெரிவித்தார்.
கத்தாரின் மக்கள்தொகையில் 9 விழுக்காட்டினர் மட்டுமே 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள்
என்பதை அவர் சுட்டினார்.