உணவில் உப்பின் அளவைக் குறைத்து, இன்னும் நலம் மிக்க வாழ்க்கைமுறைகளை ஊக்குவிக்கும் வழிகளை சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆராய்ந்து வருகிறது.
உதாரணத்துக்கு, சிங்கப்பூரில் மக்கள் அதிகப்படியான உப்பை உட்கொள்வதற்கு அவர்கள் வெளியில் சென்று அதிகம் சாப்பிடுவது ஒரு முக்கிய காரணமாகும்.
அளவுக்கு அதிகமான உப்பு உட்கொள்வதால், ரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கும். இது மாரடைப்பு, வாதம் போன்ற உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இளையவர்கள், முதியவர்கள் என சிங்கப்பூரர்களின் உடல்நலன் பொதுவாகவே குறைந்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.
வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் ஒதுக்கீடு பற்றி நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் அவர் பேசினார்.
உணவில் உப்பு அளவைக் கட்டுப்படுத்த சுகாதார மேம்பாட்டு வாரியம் சில வழிகளை அறிமுகம் செய்துள்ளது என்று திரு ஓங் கூறினார்.
உணவுச் சேவைத் துறை பயன்படுத்துவதற்காக, சுகாதாரமிக்க உணவுப்பொருள்களை உருவாக்கும் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்படும்.
மேலும், குறைவான சோடியம் உள்ள உப்பு, சோயா சாஸ் திரவியம், போன்றவற்றை உருவாக்கும் தற்போதைய முயற்சிகள் அதிகரிக்கப்படும்.
மூன்றாவதாக உப்பைக் குறைக்க சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் புதிய இயக்கம் தொடங்கப்படும்.
அத்துடன் இவ்வாண்டு டிசம்பர் 30 முதல், சுவைபானங்கள், பழச்சாறுகள், பால், தயிர் வகை பானங்கள் போன்றவற்றின் சத்து அளவைத் தெரிவிக்கும் புதிய தர வரிசை அவற்றில் இடம்பெறும்.
இந்த பானங்களின் சத்து விவரங்கள் வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்துகொள்ள இது உதவும்.