சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் வேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் பங்கெடுப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) வலியுறுத்தியுள்ளது.
இவ்வாண்டு கூடுதலான சமய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், கொவிட்-19க்கு முந்தைய ரமலானுக்குத் திரும்புவதாக அர்த்தமாகாது என்று அது நினைவூட்டி உள்ளது.
ஏப்ரல் 3 முதல் மே 2ஆம் தேதிவரை சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாத நோன்பு மேற்கொள்வர்.
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் எளிமையாக்கப்படுவதன் பொருட்டு, இவ்வாண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் வழிபாட்டில் ஈடுபடுவதை முஸ்லிம் சமூகத்தினர் எதிர்பார்க்கலாம் என்று முயிஸ் கூறியது.
எனினும், பள்ளிவாசல்களுக்கு வருவோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்பதை முயிஸ் சுட்டியது.
முஸ்லிம்கள் வீட்டிலேயே நோன்பைத் துறந்துவிட்டு தங்களது குடும்பத்தாருடன் மக்ரிப் தொழுகையில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று இஷா, தராவிஹ் தொழுகையில் ஈடுபடலாம் என்றது முயிஸ்.