சிங்கப்பூர் பெண்களின் முன்னேற்றத்தையும் முயற்சிகளையும் கொண்டாடும் கண்காட்சி ஒன்று பிளாசா சிங்கப்பூரா கடைத் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் லீ சியன் லூங் நேற்று தொடங்கி வைத்த இந்தப் புதிய கண்காட்சி, மே 3ஆம் தேதி வரை நடைபெறும். வெவ்ேவறு கருப்பொருளைக் கொண்டு 3 பிரிவுகளில் கண்காட்சி நடை பெறும். கண்காட்சிக்கு வருவோர் பெண்களின் முன்னேற்றத்தை ஆதரிக்கும் சொந்தக் கருத்துகளை அங்குப் பதிவிடலாம்.
மே 3ஆம் தேதிக்குப் பின்னர் சிங்கப்பூரின் நான்கு நகரப் பகுதி களில் இக்கண்காட்சி நடத்தப்படும்.
சிங்கப்பூர் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக, பெண்களின் சாதனைகளை விளக்கும் இந்தக் கண்காட்சிக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னோடித் தலைமுறைப் பெண்கள் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை விளக்கும் புகைப்படங்களும் ஆவணங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அவற்றுடன் பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் வருங்காலத் திட்டங்களை விளக்கும் அம்சங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி பற்றி பின்னர் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் பெண்கள் பெரும் முன்னேற்றங்களை அடைந்திருக்கும் வேளையில் அதனை நோக்கி இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நமது பங்கை ஆற்றுவோம்.
"நமது வருங்காலத் தலைமுறையினருக்கு நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்கித் தருவோம்," என்று அந்தப் பதிவில் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
கண்காட்சி தொடக்க நிகழ்வில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும் அளவுக்கு இடம்பெற்ற கலந்துரையாடல்கள், பெண்களையும் சிறுமிகளையும் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.