உடல்நலத்திற்கு உகந்த உணவுப்பொருள்களுடன் கூடிய அன்பளிப்புப் பைகளைக் குறைந்த வருமான குடும்பங்கள் நேற்று பெற்றுக்கொண்டன.
உடல்நலத்திற்கு ஏற்ற உணவுப்பொருள்களை உட்கொள்ளும் பழக்கத்தை மக்களிடையே பேணி வளர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சுமார் 700 குடும்பங்களுக்கு அந்த அன்பளிப்புப் பைகள் விநியோகிக்கப்பட்டன.
சுகாதார மேம்பாட்டு வாரியத் திற்கும் 42 சமூகப் பங்காளி நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட ஒரு கூட்டு முயற்சியான இந்த இயக்கம் கெம்பாங்கானில் உள்ள முகம்மதியா சங்கத்தில் நேற்று நடந்தது.
ரமலான் மாதத்தின்போது சர்க்கரையைக் குறைத்துக்கொள்வது போன்ற உடல்நலனுக்கு ஏற்ற வாழ்க்கைப் பாணியை மேற்கொள்ளும்படி மலாய்ச் சமூகத்திற்கு ஊக்கமூட்டும் நோக்கத்துடன் இந்த வாரியம் இரண்டு மாத கால இயக்கம் ஒன்றை மேற்கொண்டது. அந்த இயக்கமும் நேற்று முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மக்ஸாம், ரமலான் மாதத்தின்போது சமூகத்திற்கு உணவுப்பொட்டலங்களை வழங்குவது வழக்கமான ஒன்று என்று தெரிவித்தார்.
இப்படி வழங்கும்போது மக்களின் உடல்நலனுக்கு ஏற்ற நல்ல உணவுப்பொருள்களை வழங்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சர்க்கரையைக் குறைத்து இனிப்புப் பலகாரத்தை, பானத்தைக் குடும்பத்தினர் எப்படி செய்யலாம் என்பது பற்றிய தகவல்களும் நேற்று வழங்கப்பட்ட அன்பளிப்புப் பைகளில் இடம்பெற்றுள்ளன.
புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்த உதவும் குறிப்புகள் அடங்கிய கையேடும் அந்தப் பையில் இருக்கிறது. அன்பளிப்புப் பை விநியோகம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8,500 குடும்பங்களுக்கு அவை வழங்கப்படும். ரமலான் மாதம் வரை அது தொடரும்.
இதுவரை 5,900 குறைந்த வருமானக் குடும்பங்கள் அவற்றைப் பெற்று இருக்கின்றன.
அன்பளிப்புப் பைகளை நேற்று பெற்றுக்கொண்ட 700 குடும்பத் தினரில் முகம்மது தாஃபிக் முகம்மது ரஹிம், 32, என்பவரும் ஒருவர்.
பிடோக்கில் தன் மனைவி, மூன்று பிள்ளைகளுடன் ஓரறை வாடகை வீட்டில் வசிக்கும் இவர், விநியோக ஊழியராகப் பணியாற்றுகிறார். "இப்போது எனக்கு பண சிரமம் அதிகமாக இருக்கிறது. இந்த அன்பளிப்புப் பை கிடைத்து இருப்பதால் இந்த மாதம் சீராக ஓடிவிடும். என் பிள்ளைகளுக்கு ஜவுளி வாங்க எனக்கு எளிதானதாக இருக்கும்," என்று இவர் கூறினார்.
அன்பளிப்புப் பையைப் பெற்றுக்கொண்ட திருவாட்டி ஃபாசியா ஏவி, 46, என்ற பகுதிநேர விநியோக ஊழியர், இந்த அன்பளிப்புப் பை என்னுடைய பணப் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்க உதவும் என்றார். பலவற்றுக்கும் தான் பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதர அமைப்புகளும் நேற்று அன்பளிப்புப் பைகளை வழங்கின.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் 450க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கியது. $120 மதிப்புள்ள மளிகைப்பொருள் பற்றுச்சீட்டையும் அந்தக் குடும்பங்கள் பெற்றுக்கொண்டன.