நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களும் தவழும் என்பர். பழம்பெரும் இக்கலையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பெண்கள் என்றாலும் நாட்டியம் ஆடுவதிலும் சொல்லித்தருவதிலும் பல ஆண்கள் தலைசிறந்து விளங்குகின்றனர். பரதம் பழகி, நடனக் கலைஞராக ஆண்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. இந்நிலையில், 'பாவம், ராகம், தாளம் ஆண்களிடத்திலும் உண்டு' என வெற்றிவேலன், கார்த்திகையன், பாலசரவணன் ஆகிய மூன்று ஆண்மகன்களும் உணர்த்தி வருகின்றனர்.
நடனத்தின்மீதுள்ள ஆர்வத்தால் தொடக்கநிலை இரண்டில் இந்திய நடன இணைப்பாட நடவடிக்கையில் பாலசரவணன் லோகநாதன் சேர்ந்தார். தொடக்கநிலை மூன்றிலிருந்து பரதக்கலையை அவர் முறைப்படி நிருத்யாலயா கவின் கழகத்தில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
அங்கு திறமை வாய்ந்த மாணவராக விளங்கிய பாலசரவணன், தனது 17வது வயதில் 'பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியில்' நடனமணி ஆவதற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அதே ஆண்டில் அவர் தொடக்கக்கல்லூரியில் இந்திய நடன இணைப்பாட வகுப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2015ஆம் ஆண்டில் இந்திய மரபுடைமை நிலையத்தின் திறப்பு விழாவில் மற்ற பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்களுடன் 'நாட்டிய தற்பனா' அங்கத்தில் ஆடியது, தேசிய சேவையை முடித்தபின் 2017ஆம் ஆண்டில் 'வெள்ளை வட்டம்' என்ற தெருக்கூத்து நிகழ்ச்சியில் நடனமாடியது, 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தின் 'நைட் வாக்கர்' மெய்நிகர் இசை-நடன படைப்பில் நடனமாடியது என்று பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அனுபவங்கள் இனிது என்றார் இவர்.
"ஓர் ஆண் நடனக்கலைஞர் என்பதால் நடனநிகழ்ச்சியைக் காண வரும் பார்வையாளர்களின் கவனம், இயல்பாகவே என் மீதும் மற்ற ஆண் பரதக்கலைஞர்களின் மீது திரும்புகிறது. ஆகையால், நாங்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கவும் செய்கிறது," என்று அவர் கூறினார். கடந்த 16 ஆண்டுகளாக பரதநாட்டியத்தை முறையாக கற்றுவருகின்ற பாலசரவணன், தற்போது நடனத்தில் பட்டயப்படிப்பைத் தன்னுடைய குரு திருமதி அம்புஜா திருவின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்கிறார்.
"கதை சொல்வதற்கு நடனம் சிறந்ததொரு ஊடகம். இதனால், நடனத்தில் நான் ஏற்கும் கதா பாத்திரத்தின் வழி உணர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு உண்மை வாழ்க்கையில் என் உணர்வுகளின் வழி என்னை மேம்படுத்திக்கொள்கிறேன். மேலும், மக்களைச் சந்தித்துப் பேசி சமூகத் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் நடனம் எனக்களித்துள்ளது," என்றார் பாலசரவணன்.
"ஏதேனும் ஒரு கலையில் ஈடுபடும் ஆர்வம் பிள்ளைகளுக்கு இருந்தால், அந்தக் கலையைப் பயிலும் வாய்ப்புகளைப் பெற்றோர்கள் அளிக்கவேண்டும். அத்துடன், கலைகளைப் பற்றி பள்ளிகள் கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் கலைத்துறை வளரும்," என்று 25 வயது பாலசரவணன் கூறினார்.