முதலாளிகள் தங்களின் கருத்துகளைக் கேட்டு, தங்களுடன் தகுந்த முறையில் தொடர்புகொண்டு தங்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வேலை ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும் என்று சிங்கப்பூர் ஊழியர்கள் விரும்புகின்றனர். எந்த நாள்களுக்கு எத்தனை மணி நேரம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது அல்லது அலுவலகத்தில் வேலை செய்வது ஆகிய அம்சங்கள் அவற்றில் அடங்கும்.
பெரும்பாலான நாள்களில் அலுவலகத்திற்கு வருமாறு முதலாளிகள் தங்களைக் கட்டாயப்படுத்தினால் நீக்குப்போக்கை விரும்பும் ஊழியர்கள் வேறு வேலையைத் தேடிக்கொள்ள நினைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் வேலையைப் பொருத்தவரை தங்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தந்து முடிவெடுக்கும் அணுகுமுறை ஊழியர்களிடையே அதிகரித்திருப்பது கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒன்பது மாதங்களில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. அரசாங்கம், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை அடக்கும் முத்தரப்புக் குழு, நிறுவனங்கள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நிரந்தரமாகச் செய்து தரவேண்டும் என்று கூறி வருகிறது. கருத்தாய்வின் முடிவுகள் அதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.
இன்று முதல் இதுவரை வீட்டிலிருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்த அனைத்து ஊழியர்களும் மீண்டும் வேலையிடங்களுக்குச் சென்று வேலை செய்யலாம்.
"கொவிட்-19 கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழும் நிலையை சிங்கப்பூர் கிட்டத்தட்ட அடைந்துள்ளது. எவ்வாறு மீண்டும் வேலையிடங்களுக்குச் செல்வது என்பதை ஆலோசிக்கும்போது, ஆக்ககரமான முறையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கமுடிந்ததால் ஏற்பட்ட நன்மைகளை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதுதான் நாம் சிங்கப்பூருக்குத் தெரியப்படுத்த விரும்பும் முக்கியமான அம்சம்," என்று கருத்தாய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் மேத்தியூ மேத்தியூஸ் கூறினார்.
ஆக்ககரமான முறையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கமுடிந்தது மட்டுமன்றி ஊழியர்களால் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் மேலும் நன்றாகக் கவனித்துக்கொள்ளமுடிந்ததைக் கொள்ளைநோய்ப் பரவல் காட்டியதாக கருத்தாய்வை நடத்திய குழு தெரிவித்தது. 2,000க்கும் அதிகமானோரைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுமார் 500 பேரைக் கொண்டு ஒரு கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறே 19 முறை கருத்தாய்வுகள் நடத்தப்பட்டன. ஊழியர்களின் மனப்போக்கில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிய கருத்தாய்வு பலமுறை மேற்கொள்ளப்பட்டது.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் 73 விழுக்காட்டுப் பெண்களும் 66 விழுக்காட்டு ஆண்களும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் நிரந்தரமாக இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்தனர்.
பிள்ளைகள் மற்றும் தங்களைச் சார்ந்திருக்கும் மூத்த குடிமக்களைக் கவனித்துக்கொள்ளும் பெண்களில் 94 விழுக்காட்டினர் நீக்குப்போக்கை விரும்புகின்றனர். இதே சூழலைக் கையாளும் ஆண்களில் 86 விழுக்காட்டினர் நீக்குப்போக்கை விரும்புகின்றனர்.
"வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மாறுபட்ட சூழல்களைக் கையாள்வது கருத்தில்கொள்ளப்படவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. முதலாளிகள் ஊழியர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வதோடு அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும்," என்று டாக்டர் மேத்தியூஸ் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு மேலும் ஓர் அறிக்கை வெளியிடப்படலாம் என்று டாக்டர் மேத்தியூஸ் கூறினார்.