வேலையிடங்களில் இவ்வாண்டு இதுவரை 16 ஊழியர்கள் மரணமடைந்தனர். இம்மாதம் மட்டுமே வேலையிடங்களில் மாண்ட ஏழு பேரும் அவர்களில் அடங்குவர்.
நேற்று முன்தினம் மட்டும் வேலையிடங்களில் இருவர் மாண்டதை மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது சுட்டினார். இதன் தொடர்பில், சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இம்மாதம்தான் நிலைமை ஆக மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சென்ற காலாண்டு மேற்கொள்ளப்பட்ட வேலையிடப் பாதுகாப்புச் சோதனைகளைவிட இந்தக் காலாண்டில் 25 விழுக்காடு கூடுதலான சோதனைகள் நடத்தப்படும் என்று திரு ஸாக்கி தெரிவித்தார். அதற்கான வளங்களை மனிதவள அமைச்சு ஒதுக்கும் என்றும் அவர் சொன்னார்.
'மரீனா பொலிவார்ட்'டில் உள்ள 'என்டியுசி சென்டர்' நிலையத்தில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி ஸாக்கி இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
"குறிப்பாக அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்திருந்தால் இந்த விபத்துகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்பதை நினைக்கும்போது தற்போதைய நிலைமை கவலை தருகிறது," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
போதுமான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படாததும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததும் அண்மையில் நிகழ்ந்த வேலையிட மரணங்கள் குறித்த முதற்கட்ட விசாரணைகளில் தெளிவாகத் தெரியவந்ததாக திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
"வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தைப் பொருத்தவரை கடந்த சில மாதங்களில் நாம் கூடுதல் கவனத்துடன் இருந்திருக்கலாம், இருந்திருக்கவேண்டும். மேலும், வேலையிடப் பாதுகாப்பை சரியாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை இந்த விபத்துகள் நினைவூட்டுகின்றன," என்று அவர் சொன்னார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்களைக் கடைப்பிடிக்கச் செய்ய மனிதவள அமைச்சு தான் மேற்கொள்ளும் முயற்சிகளை மேம்படுத்தி வருகிறது. தேவைப்பட்டால் சரியான நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனங்களுக்கு தண்டனையும் விதிக்கப்படும் என்று அமைச்சர் ஸாக்கி கூறினார்.
மேலும், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தைப் பொருத்தவரை நிறுவனங்களின் இயக்குநர்களுக்கான பொறுப்புகளை விவரிக்கும் வழிமுறைகளை வரைய மனிதவள அமைச்சும் வேலைடியிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், தொழில்துறைச் சங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட முத்தரப்புக் குழுவின் ஆலோசனையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.
விபத்துகளைத் தடுக்க உதவும் எளிதில் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளும் அந்த வழிமுறைகளில் அடங்கும்.