சிங்கப்பூரில் ஐவரில் இருவர் மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். 15லிருந்து 35 வயதுக்கு உள்பட்ட இளையர்களைப் பொருத்தவரை இரண்டில் ஒருவர் மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
சென்ற மாதம் மேற்கொள்ளப்பட்ட மனநலம் தொடர்பிலான கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 607 சிங்கப்பூரர்களைக் கொண்டு மக்கள் செயல் கட்சியின் இளையர் பிரிவு கருத்தாய்வை நடத்தியது.
மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதும் அவற்றைக் கையாள ஒன்றுபட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவிப்பதும் கருத்தாய்வின் இலக்குகள்.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் மனநலம் தொடர்பில் போதுமான விழிப்புணர்வு இல்லை எனக் கருதுகின்றனர். மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு உதவத் தங்களிடம் போதுமான ஆற்றல் இல்லை என்றும் 70 விழுக்காட்டுக்கு மேலானோர் கூறினர்.
நேற்று நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் #பெட்டர்டுகெதர் (#BetterTogether) இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கருத்தாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. கல்வி அமைச்சர் சான் சுன் சிங், கல்வி, சமூக குடும்ப மேம்பாடு ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் சுன் சுவேலிங், ஜலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால் வான் ஸக்காரியா ஆகியோர் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்றனர்.
"நமது இளம் மாணவர்களில் பலர் தொடக்கத்திலேயே மனநல ஆலோசகர்களையும் நிபுணர்களையும் நாடுவதில்லை. இது இயல்புக்கு மாறானது. பொதுவாக இளையர்கள், தாங்களோ தங்களின் நண்பரோ பிரச்சினையை எதிர்நோக்கும்போது அதைப் பற்றி நண்பர்களுடன்தான் பகிர்ந்துகொள்கின்றனர்," என்று திரு சான் கூறினார்.
ஒருவர் தனது மனநலனையும் சுற்றியிருக்கும் மற்றவர்களின் மனநலனையும் கட்டிக்காக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய அவர் இவ்வாறு சொன்னார்.
"#பெட்டர்டுகெதர் இயக்கம், மனநலன், சவாலான சூழலில் மீள்திறனுடன் தொடர்ந்து முன்னேறக்கூடிய சிங்கப்பூரை உருவாக்குவது ஆகியவற்றில் மக்கள் செயல் கட்சி கொண்டுள்ள அக்கறையை மறுவுறுதிப்படுத்துகிறது," என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
www.bettertogether.com.sg எனும் இணையத்தளத்தில் பொதுமக்கள் #பெட்டர்டுகெதர் இயக்கம் குறித்த விவரங்களைப் பெறலாம்.